முகப்பு
தினம் ஒரு தேவாரம்

64. நெற்றி மேல் கண்ணினானே - பாடல் 6

ஒளி வீசி மயக்கும் கண்களின்

Updated On : 1 ஜூலை, 2017 at 11:27 AM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 8:12 PM

கேழல் வெண் கொம்பு பூண்ட கிளரொளி மார்பினானே
ஏழையேன் ஏழையேன் என் செய்கேன் எந்தை பெம்மான்
மாழை ஒண் கண்ணினார்கள் வலை தனில்
            மயங்குகின்றேன்
கூழை ஏறுடைய செல்வா கோடிகா உடைய கோவே

விளக்கம்

அப்பர் பிரான் இல்வாழ்க்கையில் ஈடுபடாமல் துறவியாக வாழ்ந்த்தை நாம் அனைவரும் அறிவோம். தன்னை குறையுடைவனாக சுட்டிக்காட்டி, அந்த குறையினைத் தவிர்த்து வாழ வேண்டும் என்று அடுத்தவருக்கு அறிவுரை சொல்வது அப்பர் பிரானின் பாணி. அந்த வழியில் பெண்களின் வலையில் தான் மயங்கி இறைவனை வழிபடாது இருந்ததாக அப்பர் பிரான் உணர்த்தி, இல்வாழ்க்கையில் ஈடுபட்டாலும் இறைவனை மறவாமல் வழிபட வேண்டும் என்று நமக்கு அறிவுரை கூறும் பாடல். ஏழை = அறிவினில் ஏழையாக திகழ்ந்து மெய்ப்பொருளை கண்டு கொண்டு நிலையான இன்பத்தில் திளைக்காமல், சிற்றின்பத்தில் ஆழ்ந்து கிடக்கும் நிலை. மாழை = அழகு. ஒண்கண் = ஒளி வீசும் கண்கள். கூழையேறு = உயரத்தில் குறைந்த எருது.

Advertisement

பொழிப்புரை

பன்றியாக அவதாரம் எடுத்த திருமாலின் செருக்கினை அடக்கி, பன்றியின் வெண்மை நிறம் கொண்ட பல்லினை தனது மார்பினில் அணிந்தவனே, ஒளிவீசும் மார்பினை உடையவனே, குறைந்த உயரத்தினை உடைய எருதினை வாகனமாகக் கொண்டவனே, எனது தந்தையாகிய தலைவனே, நீ கோடிகா தலத்தின் தலைவனாக விளங்குகின்றாய். அறிவினில் மிகவும் ஏழையாக இருந்து மெய்ப்பொருளின் உண்மையை புரிந்து கொள்ளாமல் வருந்தும் அடியேன், அழகாக விளங்கும் பெண்களின் ஒளி வீசி மயக்கும் கண்களின் வலையில் அகப்பட்டு மயங்குகின்றேன்; தலைவனே நீதான் அந்த மயக்கத்திலிருந்து என்னை விடுவித்து, உய்யும் வழியில் செல்ல அருள் புரிய வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.