79. நீலமாமணி கண்டத்தர் - பாடல் 2
சிவந்த மேனியை
Updated On : 29 ஜனவரி, 2024 at 11:36 PM
பாடல் 2:
கவள மா களிற்றின் உரி போர்த்தவர்
தவள வெண்ணகை மங்கையோர் பங்கினர்
திவள வானவர் போற்றித் திசை தொழும்
பவள மேனியர் பாலைத் துறையரே
விளக்கம்:
கவளம்=பெரிய சோற்று உருண்டை: யானைக்கு வைக்கப்படும் உணவு உருண்டைகள் பெரிய அளவில் இருக்கும் என்பதை உணர்த்த கவள மா களிறு என்று இங்கே கூறப்பட்டுள்ளது. தவள=வெண்மை, வடமொழிச்சொல்: திவள வானவர்=சிறப்பாக விளங்கும் தேவர்கள்.
பொழிப்புரை:
பாலைத்துறையில் உறையும் சிவபெருமான், பெரிய சோற்றுருண்டைகளை உண்டு வாழும் வலிமை மிக்க யானையின் தோலை உரித்தவர்: வெண்மையான பற்களைக் கொண்டு, வெண்ணகை வீசும் பார்வதி அன்னையைத் தனது உடலின் ஒரு பாகத்தில் கொண்டவர்: சிறப்பாக விளங்கும் தேவர்களும் சிவபெருமான் இருக்கும் திசை நோக்கித் தொழுகின்றார்கள். அவர் பவளம் போன்று சிவந்த மேனியை உடையவர்.
Advertisement