80. ஒன்று கொலாம் - பாடல் 4
எண்தோள் முக்கண்
பாடல் 4:
நாலு கொலாம் அவர் தம் முகமாவன
நாலு கொலாம் சனனம் முதல் தோற்றமும்
நாலு கொலாம் அவர் ஊர்தியின் பாதங்கள்
நாலு கொலாம் மறை பாடினதாமே
விளக்கம்:
எண்தோளன் என்று பல தேவாரப் பதிகங்களிலும் எண்தோள் முக்கண் எம்மானே என்று மணிவாசகராலும் போற்றப்படும் சிவபிரான் நான்கு முகங்களை உடையவன். அதனால் தான் எண்தோளன் என்று அழைக்கப்படுகின்றான். அப்பர் பெருமான் திரு ஆலவாய் தலத்தின் மீது அருளிய வேதியா வேத கீதா என்று தொடங்கும் பதிகத்தின் இரண்டாம் பாடலில் சிவபெருமானை நான்முகத்தான் என்றே அழைக்கின்றார்.
நம்பனே நான்முகத்தாய் நாதனே ஞான மூர்த்தீ
என்பொனே ஈசா என்றென்று ஏத்தி நான் ஏசற்று
என்றும்
பின்பினே திரிந்து நாயேன் பேர்த்தினிப் பிறவா
வண்ணம்
அன்பனே ஆலவாயில் அப்பனே அருள் செயாயே
உயிர்கள் நான்கு விதமான கருவிகள் மூலம் இனப்பெருக்கம் செய்கின்றன. கருப்பை மூலம் குட்டி போட்டு பால் கொடுத்தல், முட்டையிட்டு குஞ்சு பொறித்தல், வியர்வை மூலம் இனப்பெருக்கம் செய்தல், உமிழ்நீர் மூலம் இனப்பெருக்கம் செய்தல். இவைகளை வடமொழியில் அண்டசம், சுவேதசம், உற்பிச்சம், சராயுசம் என்று சொல்வார்கள். இந்த நான்கு வகைகளை அப்பர் பெருமான் இங்கே பிறப்பின் முதல் தோற்றம் என்று குறிப்பிடுகின்றார்.
பொழிப்புரை:
சிவபிரானின் திருமுகங்கள் நான்கு. உயிர்கள் தோன்றுவதற்கான கருவிகள் முட்டை, கருப்பை, வியர்வை, மற்றும் உமிழ்நீர் என்று நான்கு வகையாவன. சிவபிரானது ஊர்தியாகிய இடபத்தின் கால்கள் நான்கு. அவர் பாடிய மறைகள் நான்கு.
Advertisement