76. நினைந்துருகும் அடியாரை - பாடல் 2
நிலையான அழகு
பாடல் 2
பொன் நலத்த நறும் கொன்றை சடை மேல் வைத்தார்
புலியுரியின் அதள் வைத்தார் புனலும் வைத்தார்
மன் நலத்த திரள்தோள் மேல் மழுவாள் வைத்தார் வார்
காதில் குழை வைத்தார் மதியும் வைத்தார்
மின்நலத்த நுண்ணிடையாள் பாகம் வைத்தார் வேழத்தின்
உரி வைத்தார் வெண்ணூல் வைத்தார்
நன்னலத்த திருவடி என் தலை மேல் வைத்தார்
நல்லூர் எம் பெருமானார் நல்லவாறே
விளக்கம்:
Advertisement
பொன்னலத்த=பொன் போன்ற நிறம் கொண்ட; இன் அதள்=இனிமையான, மென்மையான தோல் ,
பொழிப்புரை:
சிவபெருமான் பொன்னைப் போன்ற நிறமுடையதும் அழகும் கொண்ட கொன்றை மலரை தனது சடையில் வைத்துள்ளார்; மென்மையாக உள்ள புலியின் தோலை தனது இடையில் உடுத்தியுள்ளார்; கங்கையையும் சந்திரனையும் தனது சடையில் வைத்துள்ளார்; நிலையான அழகு உடைய தோளின் மேல் மழு எனப்படும் ஆயுதத்தை வைத்துள்ளார்; மின்னல் போன்ற நுண்ணிய இடையினை உடைய உமையம்மையை தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்துள்ளார்; அவர் யானையின் தோலைப் போர்வையாக கொண்டுள்ளவர், மார்பினில் வெண்ணூல் பூண்டுள்ளவர். இத்தகைய சிறப்புகள் பெற்ற நல்லூர் பெருமானாகிய சிவபெருமான் தன்னுடைய, நல்ல நலன்கள் அருளும், திருவடியை எனது தலை மேல் வைத்தார் அவர் மிகவும் நல்லவர்.