முகப்பு
தினம் ஒரு தேவாரம்

77. அட்டுமின் இல்பலி - பாடல் 4

கனவில் கண்டேன்

Updated On : 23 அக்டோபர், 2017 at 12:00 AM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 11:25 PM

பாடல் 4:

செஞ்சுடர் சோதிப் பவளத் திரள் திகழ் முத்தனைய
நஞ்சணி கண்டன் நல்லூர் உறை நம்பனை நான்
                                                                                      ஒரு கால்
துஞ்சிடைக் கண்டு கனவின் தலைத் தொழுதேற்கு
                                                                                      அவன் தான்
நெஞ்சிடை நின்று அகலான் பல காலமும் நின்றனனே

விளக்கம்:

துஞ்சிடை=தூக்கத்தின் இடையே, கனவில்

அல்லும் பகலும் சிவபிரானைப் பற்றிய நினைவுகளுடனும் கற்பனைகளுடனும் காலத்தைக் கழித்த அப்பர் நாயகியின் கனவிலும் சிவபிரான் தோன்றியதில் வியப்பு ஏதும் இல்லை. அத்தகைய கனவினைக் குறிக்கும் பாடல் இது. சிவபிரானின் மேனி நிறம் சிவப்பு என்பதால் பவளத் திரள் என்று பல திருமுறைப் பாடல்களில் கூறப்படுகின்றது. அவரது கழுத்தில் விளங்கும் நீல நிறம், பவளத் திரளில் முத்து பதித்தது போன்று காணப்படுகின்றது என்று இங்கே அழகாக அப்பர் பிரான் கூறுகின்றார். 

பொழிப்புரை:

சிவந்த சூரியன் போன்று ஒளியுடைவனாய், பவளத் திரளில் விளங்கும் முத்து போன்று கருநீல நிறம் அவனது கழுத்தில் இருக்கும் விடம் உண்டதால் ஏற்பட்ட கறை விளங்கத் தோன்றும் சிவபெருமான் அழகாக காணப்படுகின்றான். இவ்வாறு அழகுடன் நல்லூரில் உறையும் சிவபெருமானை, நான் எனது கனவில் கண்டேன். கண்ட அவனை நான் தொழுதேன்; எனது தொழுகையை ஏற்றுக் கொண்ட அவன் எனது நெஞ்சினில் புகுந்து விட்டான்; புகுந்த பின்னர் அவன் அங்கே அகலாது இடம் பெற்று நிற்கின்றான்.   

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.