முகப்பு
தினம் ஒரு தேவாரம்

104. மெய்த்தாறு சுவையும்  - பாடல் 9

சிறந்த மலராக

Updated On : 9 ஆகஸ்ட், 2018 at 12:00 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:53 PM

பாடல் 9:

    பூவார் பொற்றவிசின் மிசை இருந்தவனும் பூந்துழாய் புனைந்த மாலும்
    ஒவாது கழுகு ஏனமாய் உயர்ந்து ஆழ்ந்து உற நாடி உண்மை காணாத்
    தேவாரும் திரு உருவன் சேரு மலை செழு நிலத்தை மூட வந்த 
    மூவாத முழங்கொலி நீர் தாழ மேல் உயர்ந்த முதுகுன்றமே

விளக்கம்:

Advertisement

கழகு=இங்கே அன்னத்தை குறிக்கின்றது; தவிசு=ஆசனம்; பூந்துழாய்=துளசி; பிரளயம் வந்த போதும் அழியாமல் நின்று பல ஊழிக் காலங்களைக் கடந்த மலை முதுகுன்றம் என்று கருதப்படுகின்றது. அதனால் இந்த மலைக்கு பழமலை என்ற பெயரும் உள்ளது. தலத்து இறைவனும் பழமலை நாதர் என்று அழைக்கப்படுகின்றார். தேவாரும்=தெய்வத் தன்மை பொருந்திய 

பொழிப்புரை:

மலர்களில் சிறந்த மலராக கருதப்படும் தாமரை மலரினைத் தனது ஆசனமாகக் கொண்ட பிரமனும் தளசி மலையினை விருப்பமுடன் அணிந்த திருமாலும், அன்னமாகவும் பன்றியாகவும் உருவெடுத்து இடைவிடாது மேலே பறந்தும் கீழே தோண்டியும் சென்று முறையே இறைவனின் திருமுடியையும் திருவடிகளையும் காண்பதற்கு முயற்சி செய்தனர். ஆனால் அவர்கள் தங்களது முயற்சியில் வெற்றி பெறாத வண்ணம் தெய்வத்தன்மை பொருந்திய திருவுருவத்தினை உடையவனாக பெருமான் திகழ்ந்தான். அத்தகைய உயர்ந்த பெருமான் வந்து சேர்ந்து உறையும் திருக்கோயில் உள்ள தலமாகிய முதுகுன்றம், பிரளய காலத்தில் செழுமையான உலகத்தை மூடும் வண்ணம் பேரொலியுடன் கடல் நீர் பொங்கி உலகத்தினை அழித்த போதும் அதனினும் உயர்ந்து நின்று பிரளயத்தில் அழியாமல் நின்று பல ஊழிகளைக் கண்ட தலமாகும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.