முகப்பு
தினம் ஒரு தேவாரம்

105. ஒடுங்கும் பிணிபிறவி   - பாடல் 8

மூப்பின் தன்மை

Updated On : 19 ஆகஸ்ட், 2018 at 12:00 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 10:01 PM

பாடல் 8:

    பல் வீழ்ந்து நாத் தளர்ந்து மெய்யில் வாடிப் பழிப்பாய வாழ்க்கை ஒழியத் தவம்
    இல் சூழ் இடம் கருதி நின்றீர் எல்லாம் இறையே பிரியாது எழுந்து போதும் 
    கல் சூழ் அரக்கன் கதறச் செய்தான் காதலியும் தானும் கருதி வாழும்
    தொல் சீர்க் கடந்தை தடங்கோயில் சேர் தூங்கானை மாடம் தொழுமின்களே

விளக்கம்:

Advertisement

இல் சூழ் இடம்=இல்லமாக கருதி வாழுமிடம்; இந்த பாடலிலும் மூப்பின் தன்மை குறிப்பிடப்பட்டு, மூப்பு அடைந்து உடல் தளர்வதன் முன்னமே தூங்கானை மாடத்து தூண்டா விளக்கினைத் தொழவேண்டும் என்ற அறிவுரை கூறப்படுகின்றது. இறை=சிறிது நேரம்; பிரியாது=தாழ்த்தாது; போதும்=செல்வீர்கள்; கல்=கயிலை மலை;   

பொழிப்புரை: 

மூப்பு அடைவதால் பற்கள் விழுந்து நாத் தளர்ந்து பேச்சு குழறி உடல் வாடி பலரது பழிப்பினுக்கும் ஆளாகும் வாழ்க்கையினைத் தவிர்க்கும் நோக்கத்துடன் தவம் செய்வதற்கு தகுந்த இடத்தினை தேடி நிற்கும் மனிதர்களே, சிறிது நேரத்தையும் வீணாக்காமல் நான் சொல்லும் இடத்திற்கு நீங்கள் அனைவரும் செல்வீர்களாக. தனது வழியில் குறுக்கிட்டது என்று கருதி கயிலாய மலையினைச் சூழ்ந்து நின்று அதனை பேர்த்து எடுக்க முயற்சி செய்த அரக்கன் இராவணன் கதறி அழும் வண்ணம், அவனை மலையின் கீழே அழுக்கிய பெருமான் சிறந்த இடம் என்று கருதி தனது காதலியுடன் உறைகின்றதும், தொன்மை வாய்ந்த கடந்தை நகரினில் உள்ளதும் ஆகிய அகன்ற தூங்கானை மாடம் திருக்கோயில் சென்று ஆங்குள்ள இறைவனை வணங்கித் தொழுது உங்கள் விருப்பத்தினை நிறைவேற்றிக் கொள்வீர்களாக.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.