முகப்பு
தினம் ஒரு தேவாரம்

86. பாடிளம் பூதத்தினானை - பாடல் 6

பள்ளி கொள்ளும்

Updated On : 25 ஜனவரி, 2018 at 10:56 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 5:34 PM


பாடல் 6:


    ஊர் திரை வேலை உள்ளானும் உலகு
                                 இறந்த ஒண்பொருளானும் 
    சீர்தரு பாடல் உள்ளானும் செங்கண்
                                விடைக் கொடியானும்
    வார்தரு பூங்குழலாளை மருவி
                                உடன் வைத்தவனும்
    ஆர்திரை நாள் உகந்தானும் ஆரூர்
                               அமர்ந்த அம்மானே


விளக்கம்:

திரை=அலை: ஊர் திரை=பரவும் அலைகள்: இறந்த=கடந்த: ஒண்பொருள்=சிறந்த பொருள்: ஆதிரை என்ற சொல் எதுகை கருதி ஆர்திரை என்று மாற்றப் பட்டுள்ளது. திருஞான சம்பந்தப் பெருமானும், திருமயிலைத் திருப்பதிகத்தில், (2.47.4) ஆதிரை நாளை ஆர்திரை நாள் என்று குறிப்பிடுவது இங்கே எண்ணத் தக்கது. ஆதிரை நாள் உகந்தான் என்று அப்பர் பிரான் இங்கே கூறுவது, ஆரூர் நகரத்து ஆதிரை நாளின் சிறப்பினை எடுத்துக் கூறும் முத்து விதானம் என்று தொடங்கும் பதிகத்தை (4.21) நினைவூட்டுகின்றது.  

    ஊர்திரை வேலை உலாவு உயிர் மயிலைக்
    கூர்தரு வேல் வல்லார் கொற்றங்கொள் சேரி தனில்
    கார்தரு சோலைக் கபாலீச்சரம் அமர்ந்தான்
    ஆர்திரை நாள் காணாதே போதியோ பூம்பாவாய்

முந்தைய பாடலில் கூறியது போல, இந்த பாடலிலும் திருமாலாக உள்ளதும் சிவபெருமான் தான் என்று அப்பர் பிரான் கூறுகின்றார்

Advertisement

பொழிப்புரை:

எங்கும் பரவும் அலைகளை உடைய பாற்கடலில் பள்ளி கொள்ளும் திருமாலாக இருப்பவனும், உலகினையும் உலகப் பொருட்களையும் கடந்த மெய்பொருளாக இருப்பவனும், பல அடியார்களால் சிறந்த பாடல்கள் மூலம் புகழப் படுபவனும், சிவந்த கண்களை உடைய காளையை வாகனமாக உடையவனும், நீண்டதும் அழகானதும் ஆன கூந்தலை உடைய உமையம்மையைத் தழுவி, தனது உடலில் ஒரு பாகமாக வைத்தவனும், ஆதிரைத் திருநாளை விரும்புவனும் ஆகிய சிவபிரான் ஆரூர் நகரத்தில் அமர்ந்த அம்மான் ஆவான். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.