86. பாடிளம் பூதத்தினானை - பாடல் 7
நெருக்கமாக சேர்த்து வைத்து
பாடல் 7:
தொழற்கு அங்கை துன்னி நின்றார்க்குத்
தோன்றி அருள வல்லானும்
கழற்கு அங்கை பன்மலர் கொண்டு காதல்
கனன்ற நின்றானும்
குழல் கங்கையாளை உள் வைத்துக் கோலச்
சடைக் கரந்தானும்
அழற்கு அங்கை ஏந்த வல்லானும் ஆரூர்
அமர்ந்த அம்மானே
விளக்கம்:
துன்னுதல்=நெருக்கமாக சேர்த்து வைத்துக் கொள்ளுதல்: தங்களுக்கு இறைவனை கைகளைக் கொடுத்தது அவனைத் தொழுவதற்காகத் தான் என்ற எண்ணத்தில் எப்போதும் இறைவனைத் தொழுதவாறு இருக்கும் அடியார்கள்: கனன்று=மிகவும் அதிகமாக பொங்கி எழுந்து
பொழிப்புரை:
தங்களது அழகிய உள்ளங்கைகளை நெருக்கமாக சேர்த்து வைத்துக் கொண்டு, தன்னைத் தொழும் அடியார்களுக்கு அவர்களது கண் முன்னே தோன்றி அருள் புரிபவன் சிவபெருமான்: தனது திருவடிகளில் தூவுவதற்காக தங்களின் அழகிய கைகளில் பல விதமான மலர்களை உடைய அடியார்கள் மீது அளவு கடந்த அன்பு கொண்டிருப்பவன் சிவபெருமான்: கூந்தலை உடைய கங்கையைத் தனது அழகிய சடையின் உள்ளே மறைத்து வைத்தவனும், தீயினைத் தனது கையில் ஏந்திய வண்ணம் நடனம் ஆட வல்லானும், ஆரூர் நகரத்தில் அமர்ந்துள்ள அம்மான் ஆவான்.
Advertisement