முகப்பு
தினம் ஒரு தேவாரம்

86. பாடிளம் பூதத்தினானை - பாடல் 7

நெருக்கமாக சேர்த்து வைத்து

Updated On : 26 ஜனவரி, 2018 at 11:18 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 5:35 PM


பாடல் 7:


    தொழற்கு அங்கை துன்னி நின்றார்க்குத்
                        தோன்றி அருள வல்லானும்
    கழற்கு அங்கை பன்மலர் கொண்டு காதல்
                       கனன்ற நின்றானும்
    குழல் கங்கையாளை உள் வைத்துக் கோலச்
                      சடைக் கரந்தானும்  
    அழற்கு அங்கை ஏந்த வல்லானும் ஆரூர்
                     அமர்ந்த அம்மானே


விளக்கம்:


துன்னுதல்=நெருக்கமாக சேர்த்து வைத்துக் கொள்ளுதல்: தங்களுக்கு இறைவனை கைகளைக் கொடுத்தது அவனைத் தொழுவதற்காகத் தான் என்ற எண்ணத்தில் எப்போதும் இறைவனைத் தொழுதவாறு இருக்கும் அடியார்கள்: கனன்று=மிகவும் அதிகமாக பொங்கி எழுந்து

பொழிப்புரை:

தங்களது அழகிய உள்ளங்கைகளை நெருக்கமாக சேர்த்து வைத்துக் கொண்டு, தன்னைத் தொழும் அடியார்களுக்கு அவர்களது கண் முன்னே தோன்றி அருள் புரிபவன் சிவபெருமான்: தனது திருவடிகளில் தூவுவதற்காக தங்களின் அழகிய கைகளில்  பல விதமான மலர்களை உடைய அடியார்கள் மீது அளவு கடந்த அன்பு கொண்டிருப்பவன் சிவபெருமான்: கூந்தலை உடைய கங்கையைத் தனது அழகிய சடையின் உள்ளே  மறைத்து வைத்தவனும், தீயினைத் தனது கையில் ஏந்திய வண்ணம் நடனம் ஆட வல்லானும், ஆரூர் நகரத்தில் அமர்ந்துள்ள அம்மான் ஆவான்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.