86. பாடிளம் பூதத்தினானை - பாடல் 8
எண்ணற்ற திருவடிகளை
பாடல் 8:
ஆயிரம் தாமரை போலும் ஆயிரம்
சேவடியானும்
ஆயிரம் பொன் வரை போலும் ஆயிரம்
தோளுடையானும்
ஆயிரம் ஞாயிறு போலும் ஆயிரம்
நீண்முடியானும்
ஆயிரம் பேர் உகந்தானும் ஆரூர் அமர்ந்த
அம்மானே
விளக்கம்:
பொன்வரை=மேரு மலை: ஆயிரம் என்ற சொல் எண்ணிக்கையற்ற என்ற பொருளில் இந்த பாடலில் பயன்படுத்தப் பட்டுள்ளது. இறைவன் சிவபெருமான் உண்மையில் உருவம் ஏதும் இல்லாதவனாக இருந்தாலும் அடியார்களின் தவத்திற்கும் அன்புக்கும் இரங்கி, பல வடிவங்களில் அவர்களுக்கு காட்சி அளித்திருக்கின்றான். பரந்து விரிந்து கிடக்கும் இந்த உலகத்தில் அனைத்து இடங்களிலும் அவன் பரவி இருப்பதால், அவன் ஒரே சமயத்தில் பல இடங்களில் இருக்க முடிகின்றது. அவ்வாறு அவன் இருக்கும் நிலை, இறைவனுக்கு எண்ணற்ற கால்கள் இருப்பதால் போலும் என்ற சிந்தனை அப்பர் பிரானுக்கு வருகின்றது. அதே போன்று, ஆயிரம் கைகள் இருந்தாலும் நாம் செய்ய முடியாத காரியங்களை, இறைவன் அனாயாசமாக செய்கின்ற நிலை, அப்பர் பிரானுக்கு, இறைவனுக்கு எண்ணற்ற கைகள் இருக்கின்றன என்ற எண்ணத்தை தோற்றுவிக்கின்றது. இந்த எண்ணத்தைத் தான் ஆயிரம் தோளுடையான். ஆயிரம் சேவடியான் என்று இந்த பாடலில் வடிக்கின்றார்.
பொழிப்புரை:
மென்மையான தாமரை மலர் போன்ற எண்ணற்ற திருவடிகளை உடையவனும், மேருமலை போன்று வலிமையான எண்ணற்ற தோள்களை உடையவனும், எண்ணற்ற சூரியன் ஒன்று சேர்ந்தது போன்று ஒளி வீசுபவனும், எண்ணற்ற நீண்ட முடிகளை உடையவனும், எண்ணற்ற பெயர்களை விரும்பி ஏற்றவனும், ஆரூர் நகரத்தில் உறையும் அம்மான் ஆவான்.
Advertisement