98. கற்றாங்கு எரியோம்பி - பாடல் 7
சிற்றம்பலத்தில் உறைபவனை
பாடல் 7:
அலையார் புனல் சூடி ஆகத்து ஒரு பாகம்
மலையான் மகளோடு மகிழ்ந்தான் உலகு ஏத்தச்
சிலையால் எயில் எய்தான் சிற்றம்பலம் தன்னைச்
தலையால் வணங்குவார் தலை ஆனார்களே
விளக்கம்:
Advertisement
சிலை=மேரு மலையாகிய வில்; முந்திய மூன்று பாடல்களில் பெருமானின் பாதங்களைத் தொழுது வணங்குவதன் சிறப்பினை கூறிய திருஞானசம்பந்தர், அத்தகைய அடியார்களின் சிறப்பினை இந்த பாடலில் குறிப்பிடுகின்றார்.
பொழிப்புரை:
அலைகள் வீசும் கங்கை நதியைத் தனது சடையில் சூடியுள்ள இறைவன், தனது உடலின் ஒரு பாகத்தில் மலையான் மகளாகிய பார்வதி தேவியை மிகுந்த மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டுள்ளான். தாங்கள் பெற்றிருந்த வரத்தின் வலிமையால் எவராலும் வெற்றி கொள்ள முடியாமல் இருந்த திரிபுரத்து அரக்கர்களின் பறக்கும் கோட்டைகள் மூன்றையும், உலகம் புகழும் வண்ணம். மேரு மலையினை வில்லாக வளைத்து அந்த வில்லினில் அம்பினை பூட்டி, தீ மூட்டி அழித்தான். அத்தகைய வல்லமை பெற்ற பெருமானை, தில்லை சிற்றம்பலத்தில் உறைபவனை, தங்களது தலை தாழ்த்தி வணங்கும் அடியார்கள், சிறந்த முறையில் பலருக்கும் தலைவர்களாக விளங்குவார்கள்.