98. கற்றாங்கு எரியோம்பி - பாடல் 8
பெருமானின் அடியார்கள்
பாடல் 8:
கூர் வாளரக்கன் தன் வலியைக் குறைவித்துச்
சீராலே மல்கு சிற்றம்பலம் மேய
நீரார் சடையானை நித்தல் ஏத்துவார்
தீரா நோய் எல்லாம் தீர்தல் திண்ணமே
விளக்கம்:
Advertisement
பெருமானை தலை தாழ்த்தி வணங்கும் அடியார்கள் தலைமைத் தன்மையுடன் திகழ்வார்கள் என்று முந்தைய பாடலில் கூறிய சம்பந்தர், இந்த பாடலில் பெருமானின் அடியார்கள், தங்களது தீராத நோய்களும் நீங்கப் பெற்று நலமுடன் வாழ்வார்கள் என்று கூறுகின்றார்.
பொழிப்புரை:
கூரிய வாளினை உடைய அரக்கன் இராவணனின் உடலும் தலையும் தோள்களும் நொறுங்கும் வண்ணம் கயிலாய மலையின் கீழே அழுத்தி, அரக்கனது உடல் வலிமையைக் குறைத்த பெருமான், சிறப்புடன் விளங்கும் தில்லைச் சிற்றம்பலத்தில் உறைகின்றார். தனது சடையினில் கங்கை நதியை அடக்கி வைத்திருக்கும் பெருமானை தினமும் போற்றிப் புகழ்ந்து வணங்கும் அடியார்கள், தங்களது தீராத நோய்களும் தீர்க்கப் பெற்று நலமாக வாழ்வது உறுதி.