98. கற்றாங்கு எரியோம்பி - பாடல் 2
இறைவனை தியானிப்பது
பாடல் 2:
பறப்பைப் படுத்து எங்கும் பசு வேட்டு எரி ஓம்பும்
சிறப்பர் வாழ் தில்லைச் சிற்றம்பலம் மேய
பிறப்பில் பெருமானைப் பின் தாழ் சடையானை
மறப்பிலார் கண்டீர் மையல் தீர்வாரே
விளக்கம்:
Advertisement
பறப்பை=வேள்விச் சாலை; பசு என்ற சொல் பொதுவாக ஆன்மாவை குறிக்கும். வேட்டு= வேட்டையாடி கொல்லும்; பசு வேட்டு=ஆன்ம போதத்தை அறவே ஒழித்து; உலகில் உள்ள உயிர்களைப் பற்றிய அறிவு, எந்த விதத்திலும் இறையுணர்வினை வளர்க்க உதவாது என்பதால், உலகத்தில் உள்ள பொருட்கள மற்றும் உயிர்கள் மீதான பற்றினை விலக்கிக் கொண்டு இறைவனை தியானிப்பது தில்லை வாழ் அந்தணர்கள் செய்த செயலாக இங்கே குறிப்பிடப் படுகின்றது. ஆன்ம போதத்தை ஒழிப்பதற்கு முதலில் நம் ஆன்மபோதம் கொண்டுள்ள தன்மையுடன் வாழ்வதை உணரவேண்டும். அவ்வாறு உணர்ந்த பின்னர் அதனை ஒழிக்க முயற்சி செய்யத் தலைப்பட வேண்டும். எனவே தான் வேட்டையாடி விலங்குகளை கொல்வது போன்று, நாம் உலகப் பொருட்கள் மீது வைத்துள்ள பாசத்தினை முற்றிலும் விலக்க வேண்டும் என்று இந்த பாடலில் குறிப்பிடப் படுகின்றது. மையல்= மயக்க உணர்வு; மாயா மலத்தின் செய்கையால் உலகம் மற்றும் உலகப் பொருட்களின் மீது ஏற்படும் மோகம்; தில்லை வாழ் அந்தணர்கள் செய்யும் வேள்விகளால் உலகினுக்கு கிடைக்கும் நன்மையை பதிகத்தின் முதல் பாடலில் குறிப்பிட்ட சம்பந்தர், இந்த பாடலில் அத்தகைய வேள்விகள், வேள்வி செய்வோருக்கு விளைவிக்கும் பயனை கூறுகின்றார்.
பொழிப்புரை:
பல இடங்களிலும் வேள்விச் சாலைகளை அமைத்து, தாங்கள் கொண்டிருந்த ஆன்ம போதத்தை அறவே நீக்கி இறைவனைப் பற்றிய சிந்தனைகளை வளர்த்துக் கொண்டு, வேள்வித்தீ வளர்க்கும் சிறப்பான செயலைச் செய்யும் தில்லை வாழ் அந்தணர்கள் உறையும் தலத்தில் உள்ள சிற்றம்பலத்தில் நடமாடும் பெருமான், தாயின் வயிற்றில் தங்கி பிறத்தல் இல்லாதவன் என்ற பெருமையை உடையவன்; பின் புறம் தாழ்ந்த சடையை உடையவன். அந்த பெருமானை மறவாது தொழும் அடியார்கள், அதன் முன்னம் தாங்கள் உலகப் பொருட்கள் மற்றும் உயிர்கள் மீது கொண்டிருந்த மயக்க உணர்வு நீங்கப் பெறுவார்கள்.