98. கற்றாங்கு எரியோம்பி - பாடல் 3
வேதங்களை ஓதி
பாடல் 3:
மையார் ஒண்கண்ணார் மாட நெடுவீதிக்
கையால் பந்து ஓச்சும் கழி சூழ் தில்லையுள்
பொய்யா மறை பாடல் புரிந்தான் உலகு ஏத்தச்
செய்யான் உறை கோயில் சிற்றம்பலத்தானே
விளக்கம்:
தில்லையில் வாழும் அந்தணர்களை முதல் இரண்டு பாடல்களில் குறிப்பிட்ட சம்பந்தர் இந்த பாடலில், தில்லையில் வாழும் பெண்களை குறிப்பிடுகின்றார். ஒண்கண்=ஒளி பொருந்திய கண்களை உடையவர்கள்; வேதங்களில் கூறப்பட்டுள்ள செய்திகள் எல்லா நாட்களுக்கும் பொருந்தும் என்பதை உணர்த்த பொய்யா மறை என்று சம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். வேதங்களை ஓதி வேள்விகள் செய்யப்பட்ட அந்தணர்களைப் பற்றிய குறிப்பின் தொடர்ச்சியாக வேதங்களின் சிறப்பு இங்கே உணர்த்தப் படுகின்றது. புரிந்தான்= விரும்பினான்; செய்யான்=சிவந்த திருமேனியை உடையவன்;
Advertisement
பொழிப்புரை:
மை தீட்டப் பெற்று ஒளியுடன் மிளிரும் நீண்ட கண்களை உடைய பெண்கள், நெடிய மாடங்கள் நிறைந்த நீண்ட வீதிகளில் தமது கைகளால் பந்தினை எறிந்து விளையாடும் அழகிய காட்சியினை உடைய தில்லை நகரத்தில், உப்பங்கழிகள் சூழ்ந்த தில்லை நகரத்தில், உள்ள சிற்றம்பலத்தில் நடனம் ஆடும் பெருமான் பொய்க்காது என்றும் பொருந்தும் செய்திகளை உடைய வேதங்களின் கீதங்களை விருப்பத்துடன் பாடியவாறு நடனம் ஆடுகின்றான். சிவந்த திருமேனியை உடைய பெருமான் உலகத்தவர் ஏத்தும் வண்ணம் உறையும் திருக்கோயில் தில்லைச் சிற்றம்பலம் ஆகும்.