98. கற்றாங்கு எரியோம்பி - பாடல் 4
மலர் சோலைகள்
பாடல் 4:
நிறை வெண் கொடி மாட நெற்றி நேர் தீண்டப்
பிறை வந்து இறை தாக்கும் பேரம்பலம் தில்லை
சிறை வண்டு அறை ஓவா சிற்றம்பலம் மேய
இறைவன் கழல் ஏத்தும் இன்பம் இன்பமே
விளக்கம்:
Advertisement
மாட வீதிகள் என்று தில்லைச் சிதம்பரத்தின் வீதிகளில் பெண்கள் ஆடிய பந்தாட்டத்தை குறிப்பிட்ட சம்பந்தர் இந்த பாடலில், அந்த வீதிகளில் இருந்த நெடிதுயர்ந்த வீடுகளை குறிப்பிடுகின்றார்.; அறை=ஒலி தொடர்ந்து வண்டுகள் ரீங்காரம் செய்யும் வண்ணம் மலர் சோலைகள் நிறைந்த ஊர் என்று உணர்த்தப் படுகின்றது. நெற்றி=உச்சி, இங்கே ஆகாயம் என்ற பொருளில் வருகின்றது.
பொன்னம்பலம் என்பது ஆடல்வல்லான் அபிஷேகம் செய்யப்படும் இடம். கொடிமரத்திற்கு அருகில் உள்ள நிருத்த சபை ஊர்த்துவ தாண்டவம் ஆடிய இடம்; ஆயிரம் கால் மண்டபம் இராஜ சபை என்று அழைக்கப் படுகின்றது; சிற்றம்பலத்திற்கு அருகில் உள்ள தேவசபையினை பேரம்பலம் என்று அழைப்பார்கள். இங்கே தான் உற்சவ மூர்த்திகளின் உருவச் சிலைகள் வைத்து பாதுகாக்கப் படுகின்றது. சிற்றம்பலம் என்பது பெருமான் நடனம் ஆடும் இடம்.
பொழிப்புரை:
தில்லைச் சிதம்பரத்தின் உயர்ந்த வீட்டு மாடங்களில் நிறைந்துள்ள உயர்ந்த வெண் கொடிகள், ஆகாயத்தினை நேராக தீண்ட, வானில் உலவும் பிறைச் சந்திரனும் அந்த கொடிகளை தொட்டு தாக்குகின்றது. இந்த நகரத்தில், வண்டுகள் தொடர்ந்து ரீங்காரம் வண்ணம் சோலைகள் நிறைந்த நகரத்தில் உள்ள பேரம்பலத்தின் அருகே அமைந்துள்ள சிற்றம்பலத்தில் பொருந்தி நடமாடும் பெருமானின் திருப்பாதங்களின் சிறப்பினை பாடுவதே நிறைந்த இன்பமாகும்.