112. பொடியுடை மார்பினர் - பாடல் 10
வண்டார் பூங்குழலி
பாடல் 10:
குண்டமணர் துவர்க் கூறைகள் மெய்யில் கொள்கையினார் புறம் கூற
வெண்தலையில் பலி கொண்டல் விரும்பினை என்று விளம்பி
வண்டமர் பூங்குழல் மங்கையொர் பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர்
தொண்டர்கள் மாமலர் தூவத் தோன்றி நின்றான் அடி சேர்வோம்
விளக்கம்:
Advertisement
துவர்க்கூறை=துவர்ச் சாயம் ஏற்றப்பட்ட உடை; புறம்=பொருந்தாத சொற்கள்; மெய்யில்= மெய்+இல், உண்மையற்ற; பெருமான் பலி ஏற்பதன் பின்னணியில் அமைந்துள்ள நோக்கத்தினை சரியாக புரிந்து கொள்ளாமல் உண்மைக்கு பொருந்தாத சொற்களை மற்றவர் கூறுவதை பொருட்படுத்தாமல் தனது கொள்கையில் உறுதிப்பாட்டுடன் நின்று, பக்குவப்பட்ட அடியார்கள் தாங்கள் இடும் மலங்களை பெற்றுக்கொண்டு அவர்களுக்கு முக்தி அளிக்கும் பெருமானின் தன்மை இங்கே குறிப்பிடப் படுகின்றது. வண்டார் பூங்குழலி என்பது தலத்து இறைவியின் திருநாமம். இந்த திருநாமம் வண்டமர் பூங்குழல் மங்கை என்ற தொடரால் உணர்த்தப் படுகின்றது.
பொழிப்புரை:
உண்டு உடல் கொழுத்த சமணர்களும், துவராடை அணிந்த புத்தர்களும், உண்மையற்ற பொருந்தாத சொற்களை கூறி பழித்த போதும், அதனை பொருட்படுத்தாமல் தொடர்ந்து உலர்ந்து வெண்மை நிறத்தில் காணப்படும் பிரமனின் மண்டையோட்டினில் பலி ஏற்பதை விரும்புவனே என்று புகழ்ந்து கூறி, வண்டுகள் அமர்கின்ற புதிய மலர்கள் சேர்ந்த கூந்தலை உடைய உமையன்னையைத் தனது உடலில் ஒரு பாகமாகக் கொண்டுள்ள பெருமான் உறைகின்ற வாழ்கொளிபுத்தூர் தலம் சென்று இறைவனின் திருப்பாதங்களில் தொண்டர்கள் நறுமணம் மிகுந்த சிறந்த மலர்களை தூவி பணிந்து வணங்க, அதனை ஏற்றுக்கொள்ளும் வண்ணம் தோன்றி நிற்கும் பெருமானது திருவடிகளை சென்று சேர்வோமாக.