113. வானமர் திங்களும் நீரும் - பாடல் 6
அன்னப் பறவைகள்
பாடல் 6:
தண் புனல் நீள்வயல் தோறும் தாமரை மேல் அனம் வைகக்
கண் புணர் காவில் வண்டு ஏறக் கள் அவிழும் கடம்பூரில்
பெண் புனை கூறுடையானைப் பின்னுசடைப் பெருமானைப்
பண் புனை பாடல் பயில்வார் பாவம் இலாதவர் தாமே
விளக்கம்:
Advertisement
தண்புனல்=குளிர்ந்த நீர்; அனம்=அன்னப்பறவை; புணர்தல்=அணைதல்; கண் புணர் கா= கண்கள் தாமே சென்று காணும் வண்ணம் அழகு நிறைந்த சோலைகள்; கண் கவரும் சோலைகள்; பண் புனை=பண்களுடன் இசைந்த; கள்=தேன்; அவிழும்=விரியும்;
பொழிப்புரை:
குளிர்ந்த நீரினை உடைய வயல்களில் தோன்றும் தாமரை மலர்கள் மேல் அன்னப் பறவைகள் தங்கி மகிழும் காட்சியும், கண் கவரும் வண்ணம் மிகுந்த அழகுடன் உள்ள சோலைகளில் வண்டுகள் ஏறி அமர்வதால் மலராக விரிந்து தேன் சொரியும் மொட்டுகள் நிறைந்து காணப்படும் காட்சியும் உடைய கடம்பூர் தலத்தில், பெண்ணைத் தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்துள்ளவனும் பின்னப்பட்ட சடையை உடையவனும் ஆகிய பெருமானின் புகழினை, இனிய பண்களுடன் இணைத்து பாடும் வல்லமை பெற்ற அடியார்களை பாவங்கள் பற்றாது.