111. பூங்கொடி மடவாள் - பாடல் 4
திருநீறு பூசியும்
பாடல் 4:
புற்றரரவு அணிந்து நீறு மெய் பூசிப் பூதங்கள் சூழ் தர ஊரூர்
பெற்றம் ஒன்று ஏறிப் பெய் பலி கொள்ளும் பிரான் அவன் உறைவிடம் வினவில்
கற்ற நால் வேதம் அங்கம் ஓர் ஆறும் கருத்தினால் அருத்தியால் தெரியும்
உற்ற பல் புகழார் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி அதுவே
விளக்கம்:
Advertisement
கருத்தினார்=கருத்தினை உணர்ந்தவர்கள்; பெய்தல்=விடுதல், வார்த்தல், அளித்தல்; புற்றரவு= புற்றில் பதுங்கி வாழும் பாம்பு; பெற்றம்=இடபம்; அருத்தி=அன்பு;
பொழிப்புரை:
புற்றினில் பதுங்கி வாழும் பாம்பினைத் தனது உடலினில் அணிகலனாக அணிந்தும் உடல் முழுதும் திருநீறு பூசியும் பூத கணங்கள் சூழ்ந்து வர பல ஊர்களுக்கு இடபத்தின் மீதேறி, உலகத்தவர் அளிக்கும் பலியினைப் பெற்றுக் கொள்ள திரிபவனும் ஆகிய தலைவன் உறையும் இடம் யாது என்று நீங்கள் வினவுவீராயின் சொல்கின்றேன் கேட்பீர்களாக; தாங்கள் கற்றுக் கொண்ட நான்கு வேதங்கள் மற்றும் ஆறு அங்கங்களின் பொருளினை உணர்ந்தவர்களாய் அன்புடன் திகழ்வோரும், அவ்வாறு அறிந்ததால் ஏற்பட்ட புகழினை உடையவர்களும் ஆகிய அந்தணர்கள் வாழும் ஓமமாம்புலியூர் தலத்தில் உள்ள வடதளி என்று அழைக்கப்படும் திருக்கோயில் தான் பெருமான் உறையும் இடம் ஆகும்.