முகப்பு
தினம் ஒரு தேவாரம்

111. பூங்கொடி மடவாள் - பாடல் 5

வாழும் தேவர்கள்

Updated On : 19 அக்டோபர், 2018 at 12:00 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 10:34 PM


பாடல் 5: 

    நிலத்தவர் வானம் ஆள்பவர் கீழோர் துயர் கெட நெடிய மாற்கு அருளால்
    அலைத்த வல்லசுரர் ஆசற ஆழி அளித்தவன் உறைவிடம் வினவில்  
    சலத்தினால் பொருள்கள் வேண்டுதல் செய்யாத்
       தன்மையார் நன்மையால் மிக்க
    உலப்பில் பல் புகழார் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி அதுவே

விளக்கம்:

Advertisement

நெடிய மாற்கு அருளால் என்ற தொடரை, ஆசற என்ற சொல்லுக்கு பின் வைத்து பொருள் கொள்ளவும். சலம்=தீய செயல்கள்; சலம் என்றால் மாறுபாடு என்று பொருள். நல்ல செயல்களுடன் மாறுபாடு கொண்டுள்ள செயல்கள் என்ற பொருள் பற்றி தீய செயல்கள் என்று கூறப்பட்டுள்ளது. கீழோர்=பாதாள லோகத்தில் வாழ்வோர்; ஆசு=குற்றம், தீய செயல்கள்; உலப்பு=அழிவு; உலப்பில் புகழ்=அழிவில்லாத புகழ்; 
  
பொழிப்புரை:

நிலவுலகத்தில் உள்ளோர், மேலுலகில் வாழும் தேவர்கள், பாதாள உலகத்தில் வாழ்வோர் என்று மூன்று உலகங்களிலும் வாழும் மக்களின் துயரை தீர்க்கும் வண்ணம், வலிமை வாய்ந்த அசுரர்கள் செய்த தீய செயல்கள் முற்றிலும் ஒழியும் வண்ணம் அந்த அசுரர்களை அழிக்கும் பொருட்டு, காக்கும் தொழிலை மேற்கொண்டுள்ள நெடிய திருமாலுக்கு சக்கரப்படை அளித்த இறைவன் உறையும் இடம் யாது என்று நீங்கள் வினவுவீராயின் சொல்கின்றேன் கேட்பீர்களாக; தீய செயல்கள் புரிந்து பொருள் ஈட்டுதல் செய்யாத ஒழுக்க சீலர்களும், தாங்கள் புரியும் நன்மையால் அழிவில்லாத பல புகழினை பெற்றுள்ள சான்றோர்களும் வாழும் ஓமமாம்புலியூர் தலத்தில் உள்ள வடதளி என்று அழைக்கப்படும் திருக்கோயில் தான் பெருமான் உறையும் இடம் ஆகும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.