முகப்பு
தினம் ஒரு தேவாரம்

111. பூங்கொடி மடவாள் - பாடல் 8

கயிலாய மலையினை

Updated On : 21 அக்டோபர், 2018 at 12:00 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 10:34 PM

பாடல் 8: 

    தலை ஒரு பத்தும் தடக்கை அது திரட்டி தான் உடை அரக்கன் ஒண்கயிலை
    அலைவது செய்த அவன் திறல் கெடுத்த ஆதியார் உறைவிடம் வினவில்  
    மலை என ஓங்கு மாளிகை நிலவு மாமதில் மாற்றலர் என்றும் 
    உலவு பல் புகழார் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளி அதுவே

விளக்கம்:

Advertisement

தடக்கை=நீண்டு அகன்ற கை; ஆதியார்=உலகத்தின் தோற்றத்திற்கு காரணமானவர்; அலைவது செய்த என்ற தொடரில் உள்ள சொற்களை அது அலைவு செய்த என்று மாற்றி படித்து பொருள் கொள்ளவும். அலைவு செய்தல்=அசைக்கத் தொடங்குதல்; திறல்=வலிமை; 

பொழிப்புரை:

பத்து தலைகளும் நீண்ட இருபது கைகளும் கொண்டுள்ளவனும் தான் என்ற செருக்கினை உடையவனும் ஆகிய அரக்கன் இராவணன் தன்னுடைய வலிமைகளை ஒன்று திரட்டி, ஒளி வீசும் கயிலாய மலையினை அசைக்கத் தொடங்கிய போது, அவனது வலிமையை கெடுத்தவரும், உலகமும் அனைத்து உலகப் பொருட்களும் தோன்றுவதற்கு மூல காரணமாமுமாக இருக்கும் பெருமான் உறையும் இடம் யாது என்று நீங்கள் வினவுவீராயின் சொல்கின்றேன் கேட்பீர்களாக; மலை போன்று உயர்ந்த மாளிகைகளும், அதனுடன் பொருந்திய பெரிய மதில்களும் உடையவர்களாய் பெரும் செல்வ நிலை மாறாதவர்களாக விளங்குவோரும் பலவகையான புகழினை உடையவர்களும் ஆகிய அந்தணர்கள் வாழும் ஓமமாம்புலியூர் தலத்தில் உள்ள வடதளி என்று அழைக்கப்படும் திருக்கோயில் தான் பெருமான் உறையும் இடம் ஆகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.