108. மறம் பய மலைந்தவர்- பாடல் 4
பெருமானது திருமேனி
பாடல் 4:
வளம் கெழு கடும்புனலொடும் சடை ஒடுங்க
துளங்கு அமர் இளம்பிறை சுமந்தது விளங்க
உளம் கொள அளைந்தவர் சுடும் சுடலை நீறு
புளம் கொள விளங்கினை புறம்பயம் அமர்ந்தோய்
விளக்கம்:
Advertisement
வளம் கெழு=வளமை பொருந்திய, நிறைந்த நீர்ப்பெருக்குடன்; துளங்கு=அசைவு; அளைந்தவர்=குழைந்தவர்; உடல் என்ற பொருளினைத் தரும் புலம் என்ற சொல் இங்கே எதுகை கருதி புளம் என்று மாறியுள்ளது. புலம் என்றால் நிலன் என்று பொருள். இங்கே பெருமானது திருமேனி என்று பொருள் கொள்ள வேண்டும்.
பொழிப்புரை:
நிறைந்த நீரினைக் கொண்டு மிகவும் விரைந்து கீழே இறங்கிய கங்கை நதியினைத் தனது சடையில் ஒடுங்கும் வண்ணம் ஒடுக்கி மறைத்தவரும், கங்கை நீரின் அலைகளால் அசைக்கப் படும் பிறைச் சந்திரன் தனது சடையில் விளங்கித் தோன்றும் வண்ணம் அணிந்தவரும், தனது அடியார்களின் உள்ளத்தில் இடம் பெரும் நோக்கத்துடன் குழைந்தவரும், தனது அடியார்களுக்கு வெந்த வெண்ணீற்று சாம்பலை தனது உடலில் பூசியவாறு விளங்கித் தோன்றுபவரும் ஆகிய பெருமான் திருப்புறம்பயம் தலத்தில் உறைகின்றார்.