108. மறம் பய மலைந்தவர்- பாடல் 6
பிறைச் சந்திரன்
பாடல் 6:
அனல்படு தடக்கையர் எத்தொழிலர் ஏனும்
நினைப்புடை மனத்தவர் வினைப் பகையும் நீயே
தனல் படு சுடர்ச்சடை தனிப்பிறையொடு ஒன்றப்
புனல் படு கிடைக்கையை புறம்பயம் அமர்ந்தோய்
விளக்கம்:
Advertisement
அனல் படு தடக்கையர்=வேள்விக்காக தீ வளர்க்கும் அந்தணர்கள்; எத்தொழிலர்=வேறு எந்த தொழில் புரிபவராக இருந்தாலும்; தணல் என்ற சொல் எதுகை கருதி தனல் என்று மாறிவிட்டது. கிடக்கை=இருக்கும் நிலை; தனிப்பிறை=ஒப்பற்ற தன்மை உடைய பிறைச் சந்திரன். பெருமான் ஏற்றுக் கொண்டதால் சிறப்பு பெற்று விளங்கும் பிறைச் சந்திரன். தடம்=நீண்ட; வினைப்பகை=வினைக்கு பகையாக நின்று அவற்றை முற்றிலும் அழிப்பவன்;
பொழிப்புரை:
வேள்விக்காக தீ வளர்க்கும் நீண்ட கைகளை உடைய அந்தணர்கள் ஆயினும், அந்தணர்கள் அன்றி வேறு ஏதேனும் தொழில் புரிபவராக இருப்பினும், பெருமானை தங்களது மனதினில் நினைப்பவர் ஆயின் அவரது தீவினைகளுக்கு பகையாக உள்ளவனும், கொழுந்து விட்டெரியும் தீச்சுடர் போன்று ஒளி வீசும் செஞ்சடையினை உடையவனும், ஒப்பற்ற ஒற்றைப் பிறையுடன் சந்திரன் ஒன்றியிருக்கும் சடையினை உடையவனும், கங்கை நதி தங்கியிருக்கும் தன்மையை உடைய சடையினை உடையவனும் ஆகிய பெருமான் புறம்பயம் தலத்தில் அமர்ந்துள்ளான்.