முகப்பு
தினம் ஒரு தேவாரம்

108. மறம் பய மலைந்தவர்- பாடல் 9

தாமரை மலரைக்

Updated On : 22 செப்டம்பர், 2018 at 12:00 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 10:17 PM


பாடல் 9:

    வடம் கெட நுடங்கு உள இடந்த இடை அல்லிக்
    கிடந்தவன் இருந்தவன் அளந்து உணரலாகார்
    தொடர்ந்தவர் உடம்பொடு நிமிர்ந்து உடன் வணங்கப்
    புடங்கருள் செய்து ஒன்றினை புறம்பயம் அமர்ந்தோய்

விளக்கம்:

Advertisement

வடம்=ஆலமரம்; இங்கே ஆலிலையை குறிக்கின்றது. நுடங்கு உள=துயில் கொள்ள; இடந்து= படுத்துக் கிடந்த; இடை=இங்கே கொப்பூழைக் குறித்தது; அல்லி என்ற சொல் தாமரை மலரைக் குறிக்கும் வண்ணம் பல திருமுறை பாடல்களில் கையாளப் பட்டுள்ளது. புடம்= மறைப்பு;  தொடர்ந்து அவர் உடம்போடு=தாங்கள் தேடிக் காணாமையால் அலுத்து தங்களது சுய உருவத்துடன்; புடங்கருள்=புள்+தங்கு+அருள்; பிரமன் மற்றும் திருமால் ஆகிய இருவரும் முறையே அன்னப்பறவை மற்றும் கருடனைத் தங்களது வாகனமாக கொண்டுள்ளனர். ஒன்றினை=அவர்களுடன் கலந்து நின்ற தன்மை.   

பொழிப்புரை:

ஆலிலையில் படுத்துக் கிடந்த திருமாலின் கொப்பூழில் தோன்றிய தாமரை மலரில் அமர்ந்துள்ள பிரமனும், ஆலிலையில் கிடந்த திருமாலும், பெருமானை அளந்து அவனது முடியையும் திருவடியையும் காண்பதற்கு, அன்னமாகவும் பன்றியாகவும் மேலே பறந்தும் கீழே அகழ்ந்தும் முயற்சி செய்து தங்களது முயற்சியில் தோல்வி அடைந்தனர். பின்னர் உண்மை நிலையை உணர்ந்த அவர்கள் இருவரும், தங்களது சுய உருவத்துடன் பெருமானை வணங்க, பெருமான் அவர்கள் இருவருக்கும் அன்னமும் கருடனும் ஆகிய பறவைகள் வாகனமாக இருக்க அருள் புரிந்த பெருமான், அவர்களுடன் ஒன்றி இருந்து அவர்கள் முறையே படைத்தல் மற்றும் காத்தல் தொழில்களை புரிவதற்கு அருள் புரிந்தான். அத்தகைய பெருமை உடைய பெருமான் தான் புறம்பயம் தலத்தில் அமர்ந்து உறைகின்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.