109. நூலடைந்த கொள்கையாலே - பாடல் 3
அச்சம் மடம் நாணம்
பாடல் 3:
ஊன் அடைந்த வெண் தலையினோடு பலி திரிந்து
கான் அடைந்த பேய்களோடு பூதம் கலந்து உடனே
மான் அடைந்த நோக்கி காண மகிழ்ந்து எரியாடல் என்னே
தேன் அடைந்த சோலை மல்கு சேய்ஞலூர் மேயவனே
விளக்கம்:
Advertisement
நோக்கி=நோக்கம் உடையவள்; பொதுவாக மருண்ட பார்வை பெண்களுக்கு அழகினை அளிக்கும் என்று கூறுவார்கள். மருண்ட பார்வைக்கு மானின் பார்வையை உதாரணமாக சொல்வது இலக்கிய மரபு. தருமபுர ஆதீனத்தின் வலைத்தளத்தில் மான்னோக்கி என்ற தொடருக்கு சுவையான விளக்கம் கொடுக்கப் பட்டுள்ளது. மான் பார்வையை கற்றுக் கொள்வதற்காக உமையன்னை அருகே வந்து, அன்னையின் பார்வை அழகினை பார்த்தது கற்றுக் கொள்வதாக உரையாசிரியர் கூறுகின்றார். அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு ஆகியவை பெண்களுக்கு உரிய நான்கு சிறந்த குணங்களாக பண்டைய இலக்கியங்கள் கூறுகின்றன. வரவிருக்கும் அபாயம் குறித்தும் எந்த அவப்பெயரும் தனக்கு தனது வாழ்வினில் வாராமல் வாழவேண்டும் என்ற எண்ணத்தினாலும் பெண்களுக்கு ஏற்படும் ஒருவகையான மனக் கலக்கம் அச்சம் என்று சொல்லப்படுகின்றது. தனக்கு தெரிந்த விஷயத்தையும் நாலு பேர் முன்னிலையில் தனக்கு தெரிந்ததாக காட்டிக் கொள்ளாமல் அடக்கமாக இருத்தல் மடம் என்று சொல்லப்படுகின்றது. வெட்கம் என்ற பண்பே நாணம் என்று சொல்லப் படுகின்றது. கணவனைத் தவிர்த்து வேறொரு ஆண்மகனின் தொடுதல் ஏற்படுத்தும் ஒருவகையான கூச்சம் பயிர்ப்பு என்று சொல்லப் படுகின்றது.
பேய்களுடன், நடனம் ஆடுவது, காட்டினில் நடனம் ஆடுவது, கையினில் தீப்பிழம்பு ஏந்தி நடனம் ஆடுவது ஆகிய மூன்றுமே எவருக்கும் அச்சமூட்டும் காட்சிகள் ஆகும். அத்தகைய காட்சியினை பொதுவாக மென்மையான உள்ளம் கொண்ட பெண்கள் காண்பது வியப்புக்கு உரியது. மேலும் அந்த பெண்மணியும் மிகுந்த மகிழ்ச்சியுடன் இந்த நடனத்தை காண்பது பெரும் வியப்பினை ஏற்படுத்தும் அல்லவா. இறைவனின் நடனத்தைக் கண்டு மகிழ்ச்சி அடையும் அன்னைக்கு எந்த சூழ்நிலையும் தடையாக இருக்க முடியாது அல்லவா. இருப்பினும் அச்சமூட்டும் சூழ்நிலையில் நடனம் ஆடுவது ஏன் என்ற கேள்வியை சம்பந்தர் இங்கே பெருமானை நோக்கி கேட்கின்றார்.
பொழிப்புரை:
உலர்ந்து வெண்ணிற நிறத்துடன் இருப்பதும் தசைகள் ஒட்டி இருப்பதும் ஆகிய பிரமனின் தலையினை கையில் ஏந்தியவாறு பலி ஏற்பதற்கு பல இடங்களில் திரிவதும். காட்டில் வாழும் பேய்கள் மற்றும் பூத கணங்களோடு கலந்து நடனமாடுவதும், அந்த நடனத்தை மருண்ட பார்வையினை உடைய பார்வதி அன்னை காணும் வண்ணம் ஆடுவதும், அவ்வாறு நடனம் ஆடும் சமயத்தில் தனது உள்ளங்கையினில் தீப்பிழம்பு ஏந்திக் கொண்டு மகிழ்ச்சியுடன் ஆடுவதும் ஆகிய பொதுவாக வேறு எவரும் செய்யாத செயல்களை பெருமானே நீ செய்வதன் காரணம் யாது. இவ்வாறு வியப்புறும் வண்ணம் நடனம் ஆடும் பெருமான் தேன் நிறைந்த மலர்கள் கொண்ட சோலைகள் நிறைந்த சேய்ஞலூர் தலத்தில் பொருந்தி உறைகின்றான்.