முகப்பு
தினம் ஒரு தேவாரம்

109. நூலடைந்த கொள்கையாலே - பாடல் 4

அரக்கர்களின் கோட்டைகள்

Updated On : 28 செப்டம்பர், 2018 at 12:00 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 10:24 PM


பாடல் 4:

    வீண் அடைந்த மும்மதிலும் வில் மலையா அரவின்
    நாண் அடைந்த வெஞ்சரத்தால் நல் எரி ஊட்டல் என்னே
    பாண் அடைந்த வண்டு பாடும் பைம்பொழில் சூழ்ந்து அழகார்
    சேண் அடைந்த மாடம் மல்கு சேய்ஞலூர் மேயவனே 

விளக்கம்:

Advertisement

பாண்=இசை; சேண்=ஆகாயம். வீண் அடைந்த=பயனற்றுப் போன; திரிபுரத்தவர்களின் கோட்டைகளை எரித்து அவர்கள் செய்து வந்த தீவினைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தமையால் நல்லெரி என்று சம்பந்தர் கூறுகின்றார். அந்நாள் வரை எவரும் நினைத்தும் பார்க்காத செயலை, மூன்று கோட்டைகளையும் ஒரே அம்பினால் வீழ்த்துவது என்ற செயலை, பெருமான் ஒரு நொடியில் செய்து முடித்தமை வியப்பு ஊட்டும் செயலாக இந்த பாடலில் குறிப்பிடப் படுகின்றது. இந்த மூன்று கோட்டைகளும் ஒரே நேர்கோட்டினில் வரும் நிகழ்ச்சி மிகவும் அபூர்வமாக எப்போதோ ஒரு முறை நிகழ்வதால், இந்த கோட்டைகள் ஒன்றுக்கொன்று துணையாக இருந்து வந்தன. ஆனால் பெருமான் இந்த நிலையினையும் தகர்த்தெறிந்து, கோட்டைகள் ஒன்றுக்கொன்று துணையாக இருந்த நிலை பயனற்று போகுமாறு செய்தார். இந்த செய்தியே இங்கு பயனற்றுப் போன மும்மதில்கள் என்ற பொருள் பட, வீண் அடைந்த மும்மதில்கள் என்று சம்பந்தர் குறிப்பிடுகின்றார்.     

பொழிப்புரை:

திரிபுரத்து அரக்கர்களின் கோட்டைகள் ஒன்றுக்கொன்று துணையாக இருந்த நிலை பாழாகும் வண்ணம், மேரு மலையினை வில்லாக வளைத்து வாசுகி பாம்பினை நாணாக அதில் பூட்டி கொடிய தீச்சுடர்கள் வெளிப்படும் வண்ணம் அம்பினை கோத்து மூன்று கோட்டைகளுக்கும் நெருப்பு மூட்டி, உலகத்தவரின் துயரினை போக்கி நன்மை புரிந்த பெருமானின் செயல் மிகவும் வியப்புக்கு உரியது. அத்தகைய வல்லமை வாய்ந்த இறைவன், பண்ணோடு பொருந்திய இசை மிழற்றும் வண்டும் நிறைந்த பசுமையான சோலைகளால் சூழப்பட்டு அழகுடன் விளங்குவதும் ஆகாயத்தை எட்டும் அளவு உயர்ந்த மாடங்களும் உடைத்தும் ஆகிய சேய்ஞலூர் தலத்தில் பொருந்தி உறைகின்றான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.