137. ஓங்கிமேல் உழிதரு - பாடல் 4
குமரன் பிறக்கவேண்டும்
பாடல் 4:
கரும்பன வரிசிலைப் பெருந்தகைக் காமனை கவின் அழித்த
சுரும்பொடு தேன் மல்கு தூமலர்க் கொன்றை அம் சுடர்ச் சடையார்
அரும்பு அன வன முலை அரிவையொடு ஒரு பகல் அமர்ந்த பிரான்
விரும்பிடம் துருத்தியார் இரவு இடத்து உறைவர் வேள்விக்குடியே
விளக்கம்:
Advertisement
கவின்=அழகு; பெருந்தகை என்று குறிப்பிட்டு காமனாக சிறப்பாக கூறுகின்றார். தவத்தில் ஆழ்ந்துள்ள பெருமானின் தவத்திற்கு இடையூறு செய்தால் நிச்சயமாக தனக்கு மரணம் ஏற்படும் என்பதை அறிந்திருந்தும், தேவர்களுக்கு பலவிதத்திலும் துன்பம் இழைத்த சூரபதுமனின் வலிமையை அழிக்கும் குமரன் பிறக்கவேண்டும் என்ற நோக்கத்துடன் மன்மதன் செயல்பட்டமை இங்கே சிறப்பித்து சொல்லப் படுகின்றது. வரிசிலை=வரிந்து கட்டப்பட்ட; அரும்பு=மொட்டு, இங்கே தாமரை மொட்டு என்று பொருள் கொள்ளவேண்டும். உலகினில் தொடர்ந்து இனப்பெருக்கம் ஏற்பட்டால் தான், வினைகளுடன் பிணைந்துள்ள உயிர்கள் தங்களது வினைகளுக்கு ஏற்ப உடலினைப் பெற்று, தங்களது வினைகளை அனுபவித்து கழிக்க குயற்சி செய்ய முடியும். இந்த இனப்பெருக்கும் ஏற்படுவதற்கு மன்மதன் உயிர்களின் இடையே காதல் மயக்கத்தை தோற்றுவித்து பெருமானுக்கு உறுதுணையாக இருப்பதால், இறைவனுக்கு உதவி செய்யும் மன்மதனை பெருந்தகை என்று சிறப்பித்து கூறியதாக அறிஞர்கள் விளக்கம் அளிக்கின்றனர்
பொழிப்புரை:
கரும்பினில் வரிந்து நாண் கட்டப்பட்ட வில்லினை உடையவனும், தேவர்களின் நலனை வேண்டித் தான் அழிவதையும் பொருட்படுத்தாது செயல்பட்ட பெருந்தகை மன்மதனின் அழகிய உடலினை அழித்தவனும், தேனினை மொய்க்கும் வண்டுகள் உடைய தூய்மையான கொன்றை மலர்களைத் தனது அழகிய சடையில் உடையவனும், ஆகிய பெருமான், அழகிய தாமரை மொட்டுகள் போன்று அமைந்த மார்பகங்களை உடைய இளமங்கை ஆகிய உமை அன்னையுடன் மிகுந்த விருப்பத்துடன் பகற்போதினில் அமரும் இடம் திருத்துருத்தி எனப்படும் தலமாகும். அவர் இரவுப் பொழுதினில் உறையும் தலம் வேள்விக்குடியாகும்.