137. ஓங்கிமேல் உழிதரு - பாடல் 5
பிறைச் சந்திரனும்
பாடல் 5:
வளம் கிளர் மதியமும் பொன் மலர்க் கொன்றையும் வாள் அரவும்
களம் கொளச் சடை இடை வைத்த எம் கண்ணுதல் கபாலியார் தாம்
துளங்கு நூல் மார்பினர் அரிவையொடு ஒரு பகல் அமர்ந்த பிரான்
விளங்கு நீர் துருத்தியார் இரவு இடத்து உறைவர் வேள்விக்குடியே
விளக்கம்:
Advertisement
களம் கொள்=இருக்கும் இடம்; விளங்குநீர் துருத்தி என்ற தொடர், ஆற்றின் இடையே இந்த தலம் ;பண்டைய நாளில் அமைந்திருந்ததை உணர்த்துகின்றது. வளம்=அழகு; கிளர்-திகழ்; துளங்கும்=அசையும்;
பொழிப்புரை:
அழகுடன் திகழும் பிறைச் சந்திரனும் பொன் நிறத்தில் காணப்படும் கொன்றை மலரையும் ஒளியுடன் திகழும் பாம்பையும், தனது சடையின் இடையே இடம்பெற்று இருக்கும் வண்ணம் வைத்துள்ள எமது பெருமான், தனது நெற்றியில் ஒரு கண் உடையவர் ஆவார். தனது கையினில் கபாலம் ஏந்திய தோற்றத்துடன் இருப்பவரும் தனது மார்பினில் பொலிந்து அசையும் வண்ணம் பூணூல் அணிந்தவரும் ஆகிய பெருமான், உமை அன்னையுடன் இணைந்து பகற்போதினில் அமரும் இடம் திருத்துருத்தி எனப்படும் தலமாகும் அவர் இரவுப் பொழுதினில் உறையும் தலம் வேள்விக்குடியாகும்.