முகப்பு
தினம் ஒரு தேவாரம்

137. ஓங்கிமேல் உழிதரு  - பாடல் 6

பலிகொளும் நீர்மையர்

Updated On : 24 ஆகஸ்ட், 2019 at 12:00 AM
பகிர்:
Updated On : 31 ஜனவரி, 2024 at 3:25 PM

பாடல் 6:

    பொறி உலாம் அடு புலி உரிவையர் வரி அராப் பூண்டு இலங்கும்
    நெறி உலாம் பலி கொளு நீர்மையர் சீர்மையை நினைப்பரியார்
    மறியுலாம் கையினர் மங்கையொடு ஒரு பகல் அமர்ந்த பிரான்
    வெறி உலாம் துருத்தியார் இரவு இடத்து உறைவர் வேள்விக்குடியே

விளக்கம்:

Advertisement

சீர்மை=பெருமை; நினைப்பரியார்=நினைப்பதற்கு மிகவும் அரியதாகிய பெருமையை உடையவர்; அடுதல்=கொல்லுதல்; அடுபுலி=கொல்லும் தன்மை உடைய புலி; பொறி=புள்ளி; உரிவை-தோல்; வரி=கோடு; வரியரா=உடலில் கோடுகளை உடைய பாம்பு; நெறி=கொள்கை; உலாம்=திரிந்து; நீர்மை=தன்மை; பலிகொளும் நீர்மையர் என்ற தொடருடன் சீர்மை என்ற சொல்லினை இணைத்து, பெருமான் பலி கொள்வதன் உயர்ந்த நோக்கத்தை, சிறப்பினை பலரும் அறிவதில்லை என்று சம்பந்தர் உணர்த்துவதாக பொருள் கொள்வது மிகவும் பொருத்தமானது. அன்றேல் பெருமானின் பெருமைகள் நினைவுகளுக்கு, எண்ணங்களுக்கு அப்பாற்பட்டது என்றும் பொருள் கொள்ளலாம்.     

பொழிப்புரை:

புள்ளிகள் உடைய தோலினைக் கொண்டதும், கொல்லும் குணத்தினை உடையதும் ஆகிய புலியின் தோலினைத் தனது ஆடையாக உடையவரும், கோடுகள் கொண்ட உடலினை உடைய பாம்பினைத் தனது அணிகலனாகக் கொண்டவரும் ஆகிய பெருமான் பல இடங்களிலும் திரிந்து பலி கொள்ளும் கொள்கையினை உடையவர். அவர் பலியற்கும் நோக்கத்தை புரிந்து கொள்ளாமல் அவரது பெருமைகள் பலவற்றை அறிந்து கொள்ளாமல் பலரும் இருக்கின்றனர். இவ்வாறு நமது எண்ணங்களையும் கடந்த பெருமையை உடைய பெருமான், தனது கையினில் மான் கன்றினை ஏந்தியவராக, பார்வதி தேவியுடன் பகல் நேரத்தில் அமர்ந்துள்ள இடம் திருத்துருத்தி தலமாகும். அவர் இரவுப் பொழுதினில் உறையும் தலம் வேள்விக்குடியாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.