137. ஓங்கிமேல் உழிதரு - பாடல் 7
உடலெங்கும் திருநீறு
பாடல் 7:
புரிதரு சடையினர் புலியுரி அரையினர் பொடி அணிந்து
திரிதரு இயல்பினர் திரிபுரம் மூன்றையும் தீ வளைத்தார்
வரிதரு வனமுலை மங்கையொடு ஒரு பகல் அமர்ந்த பிரான்
விரிதரு துருத்தியார் இரவு இடத்து உறைவர் வேள்விக்குடியே
விளக்கம்:
Advertisement
புரிதரு சடை=முறுக்கிய சடை; பொடி=திருநீறு; வரிதரு=வரிகளாக பூசப்பட்ட சந்தனக் கீற்றுகள்; வனமுலை= அழகிய மார்பகங்கள்;
பொழிப்புரை:
முறுக்கிய சடையை உடையவரும், புலித்தோலினை ஆடையாகத் தனது இடுப்பினில் அணிந்தவரும், உடலெங்கும் திருநீறு பூசியவராக உலகெங்கும் திரிந்து பலி ஏற்பவரும், திரிபுரத்து அரக்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளையும் தீயினால் வளைத்து எரித்தவரும் ஆகிய பெருமான், வரிவரியாக தனது அழகிய மார்பகங்களில் சந்தனக் கீற்று பூசிய பார்வதி தேவியுடன் பகற்பொழுதினில் உறையும் இடம் திருத்துருத்தி தலமாகும். அவர் இரவுப் பொழுதினில் உறையும் தலம் வேள்விக்குடியாகும்.