137. ஓங்கிமேல் உழிதரு - பாடல் 8
ஒளி மணிகளை
பாடல் 8:
நீண்டு இலங்கு அவிர் ஒளி நெடுமுடி அரக்கன் இந் நீள்வரையைக்
கீண்டிடந்து இடுவன் என்று எழுந்தவன் ஆள்வினை கீழ்ப்படுத்தார்
பூண்ட நூல் மார்பினர் அரிவையொடு ஒரு பகல் அமர்ந்த பிரான்
வேண்டிடம் துருத்தியார் இரவு இடத்து உறைவர் வேள்விக்குடியே
விளக்கம்:
Advertisement
நீண்டு இலங்கு=நெடுந்தூரம்; அவிர் ஒளி=பிரகாசிக்கும் ஒளி; நீள்வரை=நீண்டு உயர்ந்த =கயிலாய மலை; ஆள்வினை-முயற்சி; கீழப்படுத்துதல்=முயற்சி மேலெழுந்து வெற்றி பெறாத வண்ணம் அரக்கனை மலையின் கீழே அழுத்தி, அவனது வலிமையை அழித்து, அவனது முயற்சியினை முறியடித்த செய்கை இங்கே குறிப்பிடப்படுகின்றது.
பொழிப்புரை:
நீண்ட தூரம் தெரியும் வண்ணம் ஒளி மணிகளை உடையதும் நெடியதும் ஆகிய கிரீடத்தை அணிந்த அரக்கன் இராவணன், தான் செல்லும் வழியில் இடையூறாக நீண்டு உயர்ந்து இருந்த கயிலாய மலையினை பேர்த்து எடுத்து வேறோர் இடத்தில் வைத்துவிட்டு எனது பயணத்தினைத் தொடர்வேன் என்று ஆணவத்துடன் பேசியவாறு முயற்சி செய்த அரக்கனின் முயற்சியினை வீணடித்து, தனது கால் பெருவிரலை மலையின் மீது அழுத்தி அவனது வலிமையை அழித்த பெருமான், தனது மார்பினில் பூணூலை அணிந்துள்ளார். அவர் இளமையும் அழகும் பொருந்தி விளங்கும் உமையன்னையுடன் பகல் பொழுதினில் விரும்பி உறையும் இடம் திருத்துருத்தி தலமாகும். அவர் இரவுப் பொழுதினில் உறையும் தலம் வேள்விக்குடியாகும்.