137. ஓங்கிமேல் உழிதரு - பாடல் 9
திருமாலும், பெருமானின் அடியையும்
பாடல் 9:
கரைகடல் அரவணைக் கடவுளும் தாமரை நான்முகனும்
குரை கழல் அடி தொழக் கூரெரி என நிறம் கொண்ட பிரான்
வரை கெழு மகளொடும் பகலிடம் புகலிடம் வண்பொழில் சூழ்
விரை கமழ் துருத்தியார் இரவு இடத்து உறைவர் வேள்விக்குடியே
விளக்கம்:
Advertisement
கரைகடல்=ஒலிக்கும் கடல்; அரவணைக் கடவுள்=பாம்பினை படுக்கையாகக் கொண்டுள்ள திருமால்; குரை கழல்=ஒழிக்கும் கழல்; கெழு=வளர்ந்த; கூரெரி-நீண்ட தீப்பிழம்பு; நிறம் என்ற சொல் இங்கே வடிவத்தை குறிப்பிடுகின்றது.
பொழிப்புரை:
ஒலிக்கும் அலைகள் கொண்ட பாற்கடலினில் பாம்பினைப் படுக்கையாகக் கொண்டு உறங்கும் கடவுளாகிய திருமாலும் தாமரை மலரினில் உறையும் நான்முகனும் பெருமானின் அடியையும் முடியையும் காணமுடியாமல் தவித்து, ஒலிக்கும் கழல்கள் அணிந்த பெருமானின் திருவடிகளைத் தொழுது இறைஞ்சிய போது, நீண்ட தீப்பிழம்பாக அவர்கள் இருவருக்கும் தோற்றம் அளித்தவன் சிவபெருமான். மலைச்சாரலில் வளர்ந்த பார்வதி தேவியுடன் பகற்பொழுதினில் சென்றடைந்து பெருமான் உறையும் இடம் திருத்துருத்தி தலமாகும். அவர் இரவுப் பொழுதினில் உறையும் தலம் வேள்விக்குடியாகும்.