முகப்பு
தினம் ஒரு தேவாரம்

128. எந்தமது சிந்தை பிரியாத - பாடல் 2

அழகிய முகத்தினை உடையவள்

Updated On : 3 மே, 2019 at 12:00 AM
பகிர்:
Updated On : 31 ஜனவரி, 2024 at 1:18 PM

பாடல் 2:

    அங்கம் விரி துத்தி அரவு ஆமை விரவார அமர் மார்பில் அழகன்
    பங்கய முகத்து அரிவையோடு பிரியாது பயில்கின்ற பதி தான்
    பொங்கு பரவைத் திரை கொணர்ந்து பவளத் திரள் பொலிந்து அயலே
    சங்கு புரி இப்பி தரளத் திரள் பிறங்கொளி கொள் சண்பை நகரே
 

விளக்கம்:

சென்ற பாடலில் பிராட்டியின் கூந்தலை அழகான கூந்தல் என்று குறிப்பிட்ட சம்பந்தர் இந்த பாடலில் பிராட்டியை தாமரை போன்று அழகிய முகத்தினை உடையவள் என்று இந்த பாடலில் கூறுகின்றார். அங்கம்=உடல்; விரி=பரந்த; துத்தி=புள்ளிகள்; விரவார=கலந்து திகழ; திரை=அலைகள்; அயலே=அருகினில்; இப்பி=சிப்பிகள்; பரவை=கடல்; திரள்=குவியல்;  பிறங்க=விளங்க,  வெண்மை நிறமும் சிவப்பு நிறமும் கலந்து விளங்க;  புரி சங்கு=வலமாக சுற்றிய சங்கு; அரிவை=பிராட்டி;  தரளம்=முத்து;   

Advertisement

பொழிப்புரை:

தனது திருமேனியில், புள்ளிகள் கொண்டதும் விரிந்த படத்தினை உடையதும் ஆகிய பாம்பினையும் மார்பினில் ஆமை ஓட்டினையும் கலந்து அணிந்துள்ள பெருமான் மிகுந்த அழகனாகத் திகழ்கின்றான்.  அவன் தாமரை மலர் போன்று அழகிய முகம் கொண்ட பிராட்டியுடன் பிரியாது உறைகின்ற தலம் சண்பை நகர் என்று அழைக்கப் படுகின்ற சீர்காழி ஆகும்.  பொங்கி எழும் கடலலைகள் அடித்துக் கொண்டு வந்து சேர்க்கும் பவளக் குவியல்களின் அருகே வலம்புரி சங்குகளும் முத்துக்களும் குவியலாக குவிந்திருக்க, அதன் ஒளியால் மிகுந்த பிரகாசத்துடன் விளங்கும் சண்பை நகர் தான் பெருமான் வீற்றிருக்கும் தலமாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.