128. எந்தமது சிந்தை பிரியாத - பாடல் 6
சிறுவன் மார்க்கண்டேயனை
பாடல் 6:
பாலன் உயிர் மேல் அணவு காலன் உயிர் பாற உதை செய்த பரமன்
ஆலும் மயில் போல் இயலி ஆயிழை தனோடு அமர்வு எய்தும் இடமாம்
ஏல மலி சோலை இன வண்டு மலர் கிண்டி நறவு உண்டு இசை செயச்
சாலி வயல் கோல மலி சேல் உகளும் நீலம் வளர் சண்பை நகரே
விளக்கம்:
அணவுதல்=நெருங்குதல், அணுகுதல்; பாற=அழிய; ஆலும்=நடமாடும்; இயலி=போன்று; அமர்வு எய்தும்=விருப்புடன் இருக்கையாக கொள்வது; கிண்டி=கிளறி; நறவு=தேன்; சாலி=ஒரு வகை நெல்; கோல=அழகு; உகளும்=துள்ளி குதிக்கும்; நீலம்=நீலோற்பலம்; முந்தைய பாடல்களில் பிராட்டியின் அழகினை பல விதமாக வர்ணித்த சம்பந்தர், இந்த பாடலில் பிரட்டி மயில் போன்ற சாயலைக் கொண்டுள்ளாள் என்று கூறுகின்றார். சேல்=மீன்கள்
பொழிப்புரை:
Advertisement
சிறுவன் மார்க்கண்டேயனை நெருங்கி அவனது உயிரினை கவர்வதற்கு முயற்சி செய்த இயமன் அழியும் வண்ணம் உதைத்த பெருமான், நடமாடும் மயில் போன்று சாயலை உடையவளும், தேர்ந்தெடுத்து அழகிய நகைகளை அணிபவளும் ஆகிய உமை அன்னையுடன் மிகுந்த விருப்போடு அமரும் இடம் சண்பை என்று அழைக்கப்படும் சீர்காழி நகரமாகும். இந்த தலத்தில் உள்ள ஏலம் நறுமணம் சோலைகளில் காணப்படும் மலர்களின் மீது வண்டுகள் கூட்டமாக அமர்ந்து அந்த மலர்களைக் கிளறி மலர்களில் நிறைந்துள்ள தேனை உண்ட களிப்பினில் இசை பாடுகின்றன. அருகில் உள்ள சாலி நெல் வயல்களில் அழகான மீன்கள் துள்ளி குதித்தாட, அவற்றின் அசைவால் நீலோற்பல மொட்டுகள் மலர்ந்து அழகாக காணப்படுகின்றன.