128. எந்தமது சிந்தை பிரியாத - பாடல் 7
திருவடிகளை தொழுவதால்
பாடல் 7:
விண் பொய் அதனால் மழை விழாது ஒழியினும் விளைவு தான் மிக உடை
மண் பொய் அதனால் வளமிலாது ஒழியினும் தமது வண்மை வழுவார்
உண் பகர வாருலகினில் ஊழி பல தோறு நிலையான பதி தான்
சண்பை நகர் ஈசனடி தாழும் அடியார் தமது தன்மை அதுவே
விளக்கம்:
பெருமானின் தன்மையையும் பிராட்டியின் அழகினையும் முந்திய பாடல்களில் பதிவு செய்த சம்பந்தர் இந்த பாடலில் சீர்காழி தலத்தில் வாழ்ந்து வந்த அடியார்களின் சிறப்பினை உணர்த்துகின்றார். அவ்வாறு உணர்த்தும் சம்பந்தர் இறைவனின் திருவடிகளை தொழுவதால் அந்த பண்பு அவர்களுக்கு ஏற்பட்டது என்று கூறி, நாமும் அந்த பண்பினை வளர்த்துக் கொள்ள இறைவனை வணங்க வேண்டும் என்பதை உணர்த்தும் பாடல் இது. பண்டைய நாட்களில் மாதம் மும்மாரி மழை பொழிவது வழக்கமாக இருந்தது என்பதை நாம் இலக்கியங்களிலிருந்து அறிகின்றோம். அவ்வாறு மழை பெய்யத் தவறுவதை வானம் பொய்த்தது என்று குறிப்பிடும் வழக்கு இன்றும் நிலவுவதை நாம் காண்கின்றோம். மழையின்றி வயல்கள் வளம் குறைந்து வறண்டு காணப்படும் நிலையினை விண் பொய்த்து மண் பொய்த்து என்று சம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். விண்=மேகம்; பொய் அதனால்=மேகங்கள் மழை பொழியத் தவறினாலும்; விளைவு தான் மிகவுடை=முன்னர் மிகுந்த விளைச்சலைத் தந்த வளமுடைய; வண்மை=கொடைத்தன்மை; உண் பகர=உணவு அளித்து; வாருலகு=நீண்டு பரந்த உலகம்; பல ஊழிகளைக் கண்ட பின்னரும் நிலையாக நிற்கும் சீர்காழி தலம் போன்று அந்த நகரில் உறையும் அடியார்களும் வறட்சியான காலத்திலும் தங்களது கொடைத் தன்மை மாறாது இருந்தனர் என்று குறிப்பிட்டு தலத்தின் தன்மை மற்றும் தலத்து அடியார்களின் தன்மை ஒன்றுக்கொன்று ஒப்பிடப்பட்டு மிகவும் நயமாக கூறப்படுகின்றது
Advertisement
பொழிப்புரை:
பல ஊழிகள் கடந்த பின்னரும் நிலையாக இருக்கும் சீர்காழி தலத்தினைப் போன்று அந்த தலத்தில் உள்ள அடியார்களும் தங்களது தன்மை மாறாமல் இருக்கின்றனர். வானம் பொய்த்து மழை பொழியாததால் வளமையான நிலங்கள் தமது வளமை குன்றி விளைச்சல் தருவதை தவிர்த்தாலும், தங்களது கொடைத் தன்மையிலிருந்து வழுவாமல், நீண்டு பரந்த உலகினில் வாழும் வறியவர்களுக்கு உணவு அளிப்பதே அந்த தன்மையாகும். சண்பை என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தில் உறையும் பெருமானின் திருவடிகளை தங்களது தலையினைத் தாழ்த்தி வணங்குவதால், அந்த தலத்து அடியார்களுக்கு என்றும் மாறாத கொடைத் தன்மை ஏற்படுகின்றது