129. விளங்கிய சீர்ப் பிரமனூர் - பாடல் 8
தாமரையில் வாழும் பிரமன்
பாடல் 8:
மோடி புறம் காக்கும் ஊர் புறவம் சீர்ச் சிலம்பனூர் காழி மூதூர்
நீடு இயலும் சண்பை கழுமலம் கொச்சை வேணுபுரம் கமல நீடு
கூடியவன் ஊர் வளர் வெங்குருப் புகலி தராய் தோணிபுரம் கூடப் போர்
தேடி உழல் அவுணர் பயில் திரிபுரங்கள் செற்ற மலைச் சிலையன் ஊரே
விளக்கம்:
Advertisement
மோடி=காளி; சிலையன்=வில்லினை உடையவன்; அருளி=அருள்பவன்; மலைச் சிலையன்= மேரு மலையினை வில்லாக வளைத்த பெருமான்; நீடு இயலும்=நீண்ட காலமாக, பல ஊழிகளைக் கடந்தும், நிலைத்து நிற்கும்; கமல நீடு கூடியவன்=நீண்ட காலமாக தாமரையில் வாழும் பிரமன்; வளர்=நாள்தோறும் புகழுடன் வளரும்; கூடப் போர் தேடி உழல்=போர்களைத் தேடித் திரிந்த திரிபுரத்து அரக்கர்கள்; போர் கூட என்று மாற்றி வைத்து பொருள் கொள்ள வேண்டும். பறக்கும் கோட்டைகளில் திரிந்த வண்ணம் தாம் விரும்பிய இடங்களில் கீழே இறங்கி, ஆங்கிருந்த மக்களை அழித்த செய்கை இங்கே குறிப்பிடப் படுகின்றது. இந்த மூன்று அரக்கர்களும் பெற்றிருந்த வல்லமை கண்டு அனைவரும் அஞ்சி நடுங்கி ஓடியதால், அவர்களைத் தேடி போர் புரிய எவரும் வராத நிலையில், அவர்களே போரினைத் தேடிச் சென்ற நிலை இங்கே உணர்த்தப் படுகின்றது. பெருமான் ஒருவனே திரிபுரத்து அரக்கர்களுடன் போரிடச் சென்றவன். அவுணர்=அரக்கர்கள்; உழலுதல்=திரிதல்; செற்ற=வெற்றி கொண்ட;
பொழிப்புரை:
பெருமானிடம் நடனப் போட்டியில் தோற்று ஊருக்கு வெளிப்புறம் சென்று அமர்ந்து காவல் காக்கும் புறவம், புகழ் நிறைந்த சிரபுரம், தொன்மையான காழி, பல ஊழிகளைக் கடந்தும் நிலையாக நிற்கும் சண்பை, கழுமலம், கொச்சைவயம், வேணுபுரம், தாமரைப் பூவினில் நெடுங்காலமாக அமர்ந்து உறையும் பிரமன் வழிபட்ட பிரமனூர், நாள்தோறும் புகழில் வளரும் வெங்குரு, புகலி, பூந்தராய், தோணிபுரம் என்று பன்னிரண்டு பெயர்களை உடைய சீர்காழி தலமாவது, தம்மை எதிர்த்து போரிட வல்லவர் எவரும் இல்லாத நிலையில் தாங்களே தேடிச் சென்று வலிய போர் தொடுக்க வானில் திரிந்த திரிபுரத்து அரக்கர்கள் வாழ்ந்த மூன்று பறக்கும் கோட்டைகளையும் வெற்றி கொள்ளும் பொருட்டு மேரு மலையை வில்லாக வளைத்த பெருமான் உறையும் பதியாகும்.