129. விளங்கிய சீர்ப் பிரமனூர் - பாடல் 9
இறைவனது ஊர் தோணிபுரம்
பாடல் 9:
இரக்கம் உடை இறையவன் ஊர் தோணிபுரம் பூந்தராய் சிலம்பன் தன்னூர்
நிரக்க வரு புனல் புறவ நின்ற தவத்து அயனூர் சீர்த் தேவர் கோனூர்
வரக் கரவாப் புகலி வெங்குரு மாசிலாச் சண்பை காழி கொச்சை
அரக்கன் விறல் அழித்து அருளி கழுமலம் அந்தணர் வேதம் அறாத ஊரே
விளக்கம்:
Advertisement
வரம் கரவா என்ற தொடர் எதுகை நோக்கி வரக்கரவா என்று திரிந்தது. விறல்=வலிமை; அறா=இடைவிடாமல்;
பொழிப்புரை:
அனைத்து உயிர்களிடத்தும் இரக்கம் கொண்டுள்ள இறைவனது ஊர் தோணிபுரம், பூந்தராய், சிலம்பன் என்ற அரக்கன் வழிபட்டு பயன் அடைந்த சிரபுரம், நிறைந்தும் விரைந்தும் வரும் நதியின் அருகே உள்ள புறவம், பெருமானை நோக்கி நிலையான தவத்தைப் புரிந்து பயனடைந்த பிரமன் வழிபட்ட பிரமபுரம், சிறப்பு வாய்ந்த தேவர்களின் தலைவன் இந்திரன் வழிபட்ட வேணுபுரம், தனது அடியார்களுக்கு மறைக்காது கேட்ட வரத்தினை அருளும் இறைவன் உறையும் புகலி, வெங்குரு, குற்றமற்ற சண்பைநகர், காழி, கொச்சைவயம், என்ற பன்னிரண்டு பெயர்களை உடைய சீர்காழித் தலம், நான்கு வேதங்களும் இடைவிடாது அந்தணர்களால் ஓதப்படும் சிறப்பினை உடையதும், கயிலாய மலையினை பேர்த்து எடுக்கத் துணிந்த அரக்கன் இராவணின் வலிமையை அடக்கிய பெருமான் உறைகின்ற சிறப்பினை உடையதும் ஆகிய தலமாகும்.