130. தண்ணார் திங்கள் - பாடல் 7
இறைவனை வேண்டி
பாடல் 7:
முன்னொரு காலத்து இந்திரன் உற்ற முனி சாபம்
பின்னொரு நாள் அவ் விண்ணவர் ஏத்த பெயர்வு எய்தி
தன் அருளால் கண் ஆயிரம் ஈந்தோன் சார்பு என்பர்
கன்னியர் நாளும் துன்னமர் கண்ணார் கோயிலே
விளக்கம்:
தனது மனைவியை வஞ்சகமாக ஏமாற்றிய இந்திரன் மீது கோபம் கொண்ட கௌதம முனிவர், இந்திரனின் தன்மையை உலகத்தவர் அனைவரும் அறிந்து கொண்டு அவனை இகழும் வண்ணம் அவனது உடல் முழுவதிலும் பெண்குறிகள் தோன்ற வேண்டும் என்ற சாபத்தினை அளித்தார். இந்த சாபத்தின் விளைவால் அவனது உடல் முழுவதும் பெண்குறிகளின் அடையாளங்கள் தோன்ற இந்திரன் வெளியே தலைகாட்டுவதற்கு தயக்கம் அடைந்தான். பின்னர் இந்த சாபத்தினை நீக்கிக் கொள்ளும் பொருட்டு இந்த தலம் வந்தடைந்து இறைவனை வணங்கி தனது நிலையினை மாற்றுமாறு வேண்டினான். இறைவனது அருளால் அவனது உடலில் இருந்த பெண்குறி அடையாளங்கள் கண்களாக மாறின. இவ்வாறு கண்களாக மாறியதால் இந்த தலத்திற்கு கண்ணார்கோயில் என்றும் பெருமானுக்கு கண்ணாயிர நாதர் என்றும் பெயர் வந்ததாக தலபுராணம் கூறுகின்றது. தங்களது தலைவன் இந்திரன் அடைந்த அவமானத்தின் வெளிப்பாடாக திகழ்ந்த அவனது உடலின் நிலை மாறவேண்டும் என்று தேவர்களும் இறைவனை வழிபட்டதாக சம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். முனி=கௌதம முனிவர்; பெயர்தல்=அந்த இடத்தினை விட்டு விலகுதல்; சார்பு=சார்ந்து உறையும் இடம்; துன்னமர்=நெருங்கி வந்து; தண்ணருளால் என்ற சொல் தன்னருளால் என்று எதுகை கருதி மாற்றப்பட்டுள்ளது. தண் அருள்=குளிர்ந்த அருள்; துன்பங்களும் வருத்தமும் எவருக்கும் மனதினில் வெப்பம் ஏற்படுத்தும். இன்பங்கள் மனதினையும் உடலினையும் குளிர்ச்சியாக வைத்திருக்கும் என்பதால், இறைவனின் அருளால் வருத்தம் நீங்கி உடலும் உள்ளமும் குளிர்ந்து இருக்கும் என்பதை உணர்த்த, தண் அருள் என்று இங்கே கூறுகின்றார்.
பொழிப்புரை:
Advertisement
பண்டைய நாளில் கௌதம முனிவரால் இந்திரன் அடைந்த சாபம் தீர்க்கப்பட வேண்டும் என்று இந்திரனும் தேவர்களும் பின்னர் இறைவனை வேண்டிய போது, அவர்களது வேண்டுதலுக்கு இரங்கிய ஈசன், இந்திரனுக்கு அவமானம் தரும் வகையில் அவனது உடலெங்கும் விளங்கிய பெண்குறிகள், அழகிய ஆயிரம் கண்களாக மாறும் வண்ணம், இந்திரனது வருத்தத்தை நீக்கி அவனது உடலும் உள்ளமும் குளிரும் வண்ணம், அருள் புரிந்தவன், கண்ணார்கோயில் திருத்தலத்தில் உறையும் ஈசன். அத்தகைய கருணை உள்ளம் கொண்ட பெருமான்; தலத்தில் உள்ள கன்னிப் பெண்கள், திருக்கோயிலை அடைந்து பெருமானை நெருங்கி வழிபடுகின்றனர்.