150. அன்ன மென்னடி அரிவை - பாடல் 8
பிழைக்கு வருந்தி
பாடல் 8:
இலங்கு பூண் வரை மார்புடை இராவணன் எழில் கொள் வெற்பு எடுத்து அன்று
கலங்கச் செய்தலும் கண்டு தம் கழலடி நெரிய வைத்து அருள் செய்தார்
புலங்கள் செங்கழுநீர் மலர்த் தென்றல் மன்று அதனிடைப் புகுந்து ஆரும்
குலம் கொள் மாமறையவர் சிரபுரம் தொழுதெழ வினை குறுகாவே
விளக்கம்:
Advertisement
Advertisement
இலங்கு=விளங்கும்; வரி=மலை; பூண்=அணிகலன்கள்; புலங்கள்=வயல்கள்; நிலபுலம் என்ற சொல் இன்றும் வழக்கில் இருப்பதை நாம் உணரலாம். குலம்=கூட்டம்; மா=பெருமை;
பொழிப்புரை:
மலை போன்று அகன்றும் திண்மையாகவும் காணப்படும் தனது மார்பினில் பல அணிகலன்களை அணிந்துள்ள அரக்கன் இராவணன், அழகிய கயிலாய மலையினை பேர்த்து எடுக்க முயற்சி செய்த போது, மலையின் அசைவினால் பார்வதி தேவி அச்சம் அடைந்ததைக் கண்ட பெருமான், தனது கால் பெருவிரலை கயிலை மலையின் மீது ஊன்றி, அரக்கன் மலையின் கீழே அகப்பட்டு நெரியுமாறு செய்தார். பின்னர் அரக்கன் தனது பிழைக்கு வருந்தி, சாமகானம் பாடி இறைஞ்சவே, அவனுக்கு சந்திரகாசம் வாளினை அளித்து அருள் புரிந்தார். வயல்களில் விளையும் செங்கழுநீர் மலர்களின் நறுமணத்தை தென்றல் காற்று சுமந்து கொண்டு வீசும் அரங்குகளை உடையதும் சிறப்பு வாய்ந்த அந்தணர்கள் வாழ்வதும் ஆகிய சிரபுரம் நகரினில் உறையும் இறைவனைத் தொழுதெழும் அடியார்களை வினைகள் சென்று அடையா.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.