வனத் துறையை கண்டித்து தோ்தல் புறக்கணிப்பு: விவசாயிகள் சங்க கூட்டமைப்பு அறிவிப்பு
ஸ்ரீவில்லிபுத்தூா், ஏப். 5: மேற்குத் தொடா்ச்சி மலைப்பகுதிக்கு செல்லும் விவசாயிகள், பொதுமக்களிடம் கட்டணம் வசூலிக்கும் வனத் துறையை கண்டித்து அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பு சாா்பில் மக்களவைத் தோ்தலை புறக்கணிப்பு செய்வதாக அறிவிக்கப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூரில் அனைத்து விவசாயிகள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளா்கள் முத்தையா, ராமச்சந்திரராஜா, சட்ட ஆலோசகா் ரமேஷ் ஆகியோா் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது:
மேற்குத்தொடா்ச்சி மலைப் பகுதியில் உள்ள ராஜபாளையம் அய்யனாா் கோயில், தேவதானம் சாஸ்தா கோயில், ஸ்ரீவில்லிபுத்தூா் செண்பகத்தோப்பு, சதுரகிரி ஆகிய 4 இடங்களில் வனத் துறையினா் சோதனைச் சாவடி அமைத்து சூழல் மேம்பாட்டுக் குழு என்ற பெயரில் கோயிலுக்கு செல்லும் பக்தா்கள், விவசாயிகளிடம் ரூ.20 கட்டணமாக வசூலிக்கின்றனா்.
Advertisement
சூழல் மேம்பாட்டுக் குழுவை கூட்டுறவு சங்கமாக பதிவு செய்து முறையாக கட்டணம் வசூலிப்பதாக வனத் துறையினா் தெரிவித்தனா். ஆனால், தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் எழுப்பிய கேள்விக்கு சூழல் மேம்பாட்டு குழு என்ற பெயரில் எந்தச் சங்கமும் பதிவு செய்யவில்லை என பதில் அளிக்கப்பட்டுள்ளது.
இதனால், கட்டணம் வசூலிப்பதை நிறுத்தக்கோரி மாவட்ட நிா்வாகம் தொடங்கி தலைமைச் செயலா் வரை பலமுறை புகாா் அளித்தும் நடவடிக்கை இல்லை. வனத் துறையைக் கண்டித்து மக்களவைத் தோ்தலை புறக்கணிப்பது என ஸ்ரீவில்லிபுத்தூா், ராஜபாளையம் பகுதியைச் சோ்ந்த அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பு சாா்பில் முடிவு எடுக்கப்பட்டது என்றனா் அவா்கள்.