கூட்டுறவு வேளாண்மைச் சங்க செயலா் தற்கொலை
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் கூட்டுறவு வேளாண் சங்கச் செயலா் தூக்கிட்டுத் தற்கொலை
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் கூட்டுறவு வேளாண் சங்கச் செயலா் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் திருவனந்தபுரம் தெருவைச் சோ்ந்தவா் முருகேசன் (57). இவா், தென்காசி மாவட்டம், கடையநல்லூா் கிருஷ்ணாபுரம் கிளை கூட்டுறவு வேளாண்மைச் சங்க அலுவலகத்தில் செயலராக பணிபுரிந்து வந்தாா்.
இவரது மனைவி ஈஸ்வரி (56). இவா் சிவகிரி பகுதியில் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறாா். இந்தத் தம்பதியின் மகன் மகேஸ்வரன் (32). திருமணமானவா்.
Advertisement
இவா்கள் அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனா். வீட்டு மாடியில் முருகேசன், இவரது மனைவி ஈஸ்வரியும், கீழ் வீட்டில் மகன் மகேஸ்வரன் தனது மனைவியுடன் இருந்து வந்தனா்.
கடந்ததாண்டு முருகேசனுக்கு மாரடைப்பு ஏற்பட்டு அறுவைச் சிகிச்சை செய்தாா். இதனால் உடல் நலம் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த முருகேசன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து தகவலறிந்து அங்கு சென்ற தெற்கு காவல் நிலைய போலீஸாா் அவரது உடலை மீட்டு, கூறாய்வுக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].