தினமணி கதிர்

தொண்டு: சிறந்த மருத்துவம்; குறைந்த கட்டணம்!

சுற்றுச்சூழல், பசுமை இயக்கம் என்று சொன்னால் சட்டென்று இவர் பெயர் தான் எல்லாருக்கும் நினைவுக்கு வரும். அவர் ஈரோட்டைச் சேர்ந்த டாக்டர் வெ. ஜீவானந்தம்.  அவருடைய இன்னொரு முகம் பலருக்கும் தெரியாதது.   நடுத

வ. ஜெயபாண்டி

சுற்றுச்சூழல், பசுமை இயக்கம் என்று சொன்னால் சட்டென்று இவர் பெயர் தான் எல்லாருக்கும் நினைவுக்கு வரும். அவர் ஈரோட்டைச் சேர்ந்த டாக்டர் வெ. ஜீவானந்தம்.  அவருடைய இன்னொரு முகம் பலருக்கும் தெரியாதது.

  நடுத்தர வர்க்கத்துக்கு ஏற்ற சிறந்த வைத்தியம்; பிறரது நலனில் அக்கறையுள்ள எதிர்கால சமுதாயம்! -இப்படி எண்ணற்ற கனவுகளோடு சமூகத்தில் எதிர்நீச்சல் போடுகிறார்.

ஈரோடு இவரது பூர்வீகம். அப்பா எஸ்.பி. வெங்கடாசலம். சுதந்திரப் போராட்டத் தியாகி. அம்மா லூர்துமேரி. செவிலியர். இவர் பரிட்சார்த்த முறையில் "மருத்துவ சுயராஜ்யத்தை' மலரவைக்க பெருமுயற்சி எடுத்து போராடிவருகிறார். சமாதானம் மற்றும் முன்னேற்றத்துக் கான இந்திய மருத்து வர்கள் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலத் தலைவராகவும் இருக்கிறார். முதியோருக்கான இல்லாம், சிறுவர் இல்லம், பார்வையற்றவர்களுக்கான தொழிற்சாலை என அவருடைய சமூகப் பணிகள் விரிவடைந்து கொண்டே போகின்றன. அது மட்டுமா?

  ஈரோட்டில் பொதுமக்கள் மற்றும் மருத்துவர்கள் பங்களிப்புடன், தரமான  சிகிச்சைக்கு  மருத்துவமனைகளை நிறுவி, அதன்மூலம் மிகக்குறைந்த செலவில் சிகிச்சை அளித்து, புதிய செயல்பாட்டை அறிமுகப்படுத்தி உள்ளார்.

  இதற்காக சமீபத்தில் மதுரை வந்த மருத்துவர் ஜீவானந்தத்திடம் அவரது திட்டம் குறித்து நாம் பேசியதிலிருந்து...

*  உங்களது புதிய திட்டம் குறித்து கூறுங்களேன்?

   மருத்துவம் என்பது மக்கள் சேவைக்கான புனிதமான தொழிலாக இருந்தது. ஆனால், தற்போது அது வணிகமயமாகி விட்டது. இதனால் நடுத்தர வர்க்கத்துக்கு நல்ல மருத்துவ சிகிச்சை என்பது "பேய்க் கனவாகி' வருகிறது.

 பரிசோதனைகளுக்கே பல லட்சம் செலவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், இளம் மருத்துவர்களுக்கு கெüரவமான பணிச்சூழல் இல்லை. இப்போதைய பிரச்னையானது "சமூகத்தின் தேவைக்கு ஏற்ற மருத்துவர் தேவை' என்பதுதான்.

  எனவே மருத்துவர்களும், வசதியுள்ள பொதுமக்களும் இணைந்தால், நடுத்தர வர்க்கத்துக்கான நல்ல மருத்துவமும், நம்பிக்கையான சிகிச்சையும் நிச்சயம் கிடைக்கும்.

*  அரசு மருத்துவமனைகளை நவீனமயமாக்கினால் போதுமே..! அதற்காக, நீங்கள் குரல் கொடுக்கலாமே?

  அரசு மருத்துவமனைகள் என்பது ஏழைகளுக்கானது. தனியார் மருத்துவமனைகளானது செல் வந்தர்களுக்கானது. இதில் அரசு மருத்துவமனைக்குச் செல்ல மனமில்லாமலும், தனியார் மருத்துவ மனைகளுக்குச் சென்று அதிகம் செலவழிக்க முடியாமலும் திண் டாடுவது நடுத்தர வர்க்கத்

தினர்தான்.

  இவர்களுடைய பிரச்னையைப் போக்கும் வகையில், அவர்களது பிரதிநிதிகளும், இளம் மருத்துவர்களும் இணைந்து தமக்காக, தம் மக்களுக்காக புதிய மருத்துவமனைகளை உருவாக்க முடியும்.

  இது நடைமுறையில் சாத்தியமாகுமா?

  சாத்தியமாக்கிக் காட்டியிருக் கிறோமே! ஈரோட்டில் 25 மருத்துவர்களும் 25 நடுத்தர வர்க்கத்து மனிதாபிமானிகளும் சேர்ந்து அளித்த ரூ.5 கோடியில் மருத்துவமனையைக் கட்டி உள்ளோம்.

 இதில், அனைத்து நோய்களுக்கான சிகிச்சையும் திறமையான மருத்துவர்களால் அளிக்கப்படுகிறது. இங்கு இடம் இலவசம். பரிசோதனைகளுக்கும் மற்ற மருத்துவமனைகளைவிட பல மடங்கு செலவு குறைவு.

  இங்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்களுக்கு அறை இலவசம். அவர்கள் குறைந்த அளவே கட் சிகிச்சைக்கு வருவோருக்கு விருப்பத்துக்கு ஏற்ப கட்டணம் என வெளிப்படையாகவே கூறி விடுகிறோம்.

  * இத்தகைய மருத்துவமனையை நிர்வகிப்பது எப்படி?



  மருத்துவமனை உருவாக முதலீடு செய்தவர்களே, அம்மருத்துவமனையின் அறங்காவலர்கள். அவர்களுக்கு மருத்துவமனையின் மருந்து விற்பனைப் பிரிவில் கிடைக்கும் பணத்திலிருந்து வருடந்தோறும் ஒரு தொகை கிடைக்கும்.

 இப்படி குறைந்த கட்டணம் வசூலித்த நிலையில், முதலீடு செய்தவர்களுக்கு கடந்த ஆண்டு ரூ. 50 ஆயிரம் அளிக்க முடிந்தது. மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மற்ற பெரிய மருத்துவமனைகளைவிட அதிக ஊதியமும், சலுகைகளும் அளிக்கப்படுகின்றன.

 * மருத்துவர்களும், மனிதாபிமானம் மிக்கவர்களும் சேர்ந்து நடத்தும் மருத்துவமனையால், அப்படி என்னதான் சமூக நன்மை கிடைத்துள்ளது?

சிகிச்சை பெற வருவோர், தங்கும் தனியறைக்கு ரூ.700, 2 பேர் சேர்ந்திருக்கும் அறைக்கு ரூ.350, பகிர்வு அறைக்கு ரூ.150 என தினமும் நோயாளிகளிடம் வசூலிக்கப்படுகிறது.

 குளுகோஸ், ஊசிகள் இலவசம். மருத்துவர் பரிசோதனைக் கட்டணம், மருந்துகளுக்கான செலவுகள் மட்டுமே. எனவே, தரமான சிகிச்சையை இங்கு பெற்றுச் செல்ல முடிகிறது.

* தனியார் நடத்தும் மருத்துவமனையைவிட, கூட்டாக நடத்தப்படும் புதிய மருத்துவமனை எந்த விதத்தில் வேறுபடுகிறது?

 மருத்துவமனையை ஆரம்பிக்க வேண்டும் என்றால், பல கோடி ரூபாய் செலவழிக்க வேண்டியுள்ளது. அப்படி செலவழிக்க வங்கியிலோ, தனியாரிடமோ கடன் வாங்கித்தான் ஆகவேண்டும்.

  தனியாக மருத்துவர் கடன் வாங்கி மருத்துவமனை ஆரம்பித்தால், அக்கடனை அடைப்பதற்காக அவர் மருத்துவ நெறிமுறைகளையும், மனிதாபிமானத்தையும் மீறித் தான் சம்பாதிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

  எனவேதான், மக்களும் மருத்துவர்களும் இணைந்த மருத்துவமனைகள் உருவானால், அங்கு மருத்துவத்துறை சமூகக் கூட்டு முயற்சியாகி விடுகிறது.

  இதில் அந்தந்தப் பகுதியில் மருத்துவமனையை ஆரம்பிப் போரே அவற்றின் நிர்வாகிகள். எனவே, ஆங்காங்கே சுயராஜ்

யமான மருத்துவமனைகள் உருவாகி தரமான சிகிச்சை அளிக்கவேண்டும் என்பதே எங்களது நோக்கம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

SCROLL FOR NEXT