எனக்கு இலந்தைப் பழமும் பேரீச்சம் பழமும் சாப்பிட மிகவும் பிடிக்கும். ஆனால் அவற்றின் மருத்துவகுணங்கள் தெரியவில்லை. அவை பற்றிய ஆயுர்வேத கருத்துகள் எவை?
சாய்ராம், சென்னை.
சீமை இலந்தை (ராஜபதரம்), நாட்டு இலந்தை (பதரம்), காட்டு இலந்தை (க்ஷýத்ர பதரம்) என்று பழத்தின் உருவத்தைக் கொண்டு இலந்தைப் பழம் மூன்று வகையில் கிடைக்கின்றது. உருவத்தில் பெரிதான சீமை இலந்தை இரான், ஆப்கானிஸ்தான், சீனா , இந்தியாவில் காஷ்மீர், பாகிஸ்தானில் பலுசிஸ்தானம் ஆகிய இடங்களில் நிறைய விளைகிறது. வெளிநாடுகளிலிருந்து வருவதால் அதற்குச் சீமை இலந்தை என்று பெயர். ருசியில் நல்ல இனிப்பானது.
புளிப்புத் தூக்கலான இனிப்புடன் கூடியது நாட்டு இலந்தை. துவர்ப்பும் புளிப்பும் மிக்கது காட்டு இலந்தை. அளவில் மிகவும் சிறியதாக இருப்பதால், உணவாக அதிகம் பயன்படுவதில்லை.
பிடித்திருக்கிறது என்ற காரணத்தினால் இலந்தைப் பழத்தை அதிகம் சாப்பிட்டால் பசி மந்தமாகிவிடும். அதற்குக் காரணம் அதிலுள்ள நெய்ப்பும் பிசுபிசுப்பும்தான். காய் கனிந்து பழமாகிவிட்டால் அதன் சுவை கூடிவிடும். அதைச் சாப்பிட்டால் பித்தம் தணிந்துவிடும். நன்றாகப் பழுத்திருந்தால் அதிலுள்ள விதையை நீக்கிவிட்டு, தோலையும் பழச் சதையையும் உலர்த்தி வைத்துக் கொண்டு, தொண்டை நுரையீரல் பகுதிகளில் கபம் உறைந்து வெளியே வராமல் வறட்டிருமல் ஏற்படும் போது இதைச் சாப்பிட கபம் இளகி கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படும்.
தொண்டை எரிச்சல் குறையும். விக்கலைப் போக்கி, பசியை நன்றாகத் தூண்டிவிடும், நீரிழிவு நோயில் ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்கவும், அடிக்கடி போகும் சிறுநீரின் அளவைக் குறைக்கவும் இது உதவும். குடலில் தேங்கும் மலத்தை இளக்கி வெளியேற்றிக் குடலுக்கு வலுவூட்டும்.
சிலருக்குப் பசி மந்தமாகி ஜீரண சக்தி குறைவாக இருக்கும். அந்த நிலையில் இலந்தை வற்றலுடன் மிளகும் இந்துப்பும் சேர்த்துத் தூளாக்கி, சிறிது சூடான தண்ணீருடன் காலையில் சாப்பிட, பசி மந்தம் நீங்கி, ஜீரண சக்தி அதிகமாகும். பொதுவாக புளிப்பு கெடுதல். ஆனால் புளிப்பான இலந்தை வற்றலைச் சேர்த்துப் பச்சடி செய்து சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது. உடல் களைப்பை நீக்கி, உடலுக்குப் புஷ்டி, பலமளிப்பதில் சீமை இலந்தைப் பழம் நல்ல உணவாகும்.
பேரீச்சம்பழம், சிற்றீச்சை (கர்ஜுரம்), பேரீச்சை (பிண்டகர்ஜுரம்) என இரண்டு வகை. இதில் பேரீச்சையில் பழமாகப் பாடம் செய்யப்பட்டது பேரீச்சம் பழமென்றும், உலர வைத்து பேரீச்சங்காய் என்றும் கிடைக்கிறது.
நல்ல குளிர்ச்சியைத் தரக்கூடிய பேரீச்சம் பழத்தில் பிசுபிசுப்பும் இனிப்பும் உண்டு. பலம் புஷ்டி, பசி தரக்கூடியது. மலத்தை இளக்கி வெளியாக்கும். சிறுநீர் எரிச்சலைப் போக்கும். தொண்டை மார்பில் கட்டிள்ள கபத்தை இளக்கி, வெளியே கொண்டுவரும்.
பேரீச்சங்காய் வாயில் அதிகமாக ஊறும் எச்சிலைத் தடுக்கும். பேதி, சீதபேதி, ரத்த பேதி போன்றவற்றை நிறுத்தும். காயைச் சாப்பிட்டுவிட்டுப் பால் அருந்தலாம்.
பேரீச்சங்காய் கஷாயம் சாப்பிட கபஜ்வரம், பிதற்றலுடன் கூடிய காய்ச்சல், வறட்டிருமலால் விலாவலி, பசியின்மை, மலச்சிக்கல் போன்றவை நீங்கும்.
தேனில் ஊறிய பேரீச்சம்பழத்தை ஆண்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர, விந்தணுக்கள் வளரும். ரத்தத்தையும் பித்தத்தையும் தெளிவாக்கும்.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.