தெலுங்கிலும்
ஹிந்தியிலும் பிஸியாக இருந்தாலும் தமிழில்
நடிக்கவே மிகவும்
ஆசைப்படுகிறேன். ஆனால் நான் தமிழ்ப் படங்களில் நடித்துவிடக் கூடாது என தமிழ்த் திரையுலகில்
எனக்கு எதிராக ஒரு பெரிய சதி நடக்கிறது. ஆனால் அவற்றையெல்லாம்
எதிர்கொண்டு 2013-ல் இருந்து தமிழில் நடிப்பேன் என தெலுங்கு
பத்திரிகைகளில்
பேட்டி கொடுத்துள்ளார் தமன்னா.
பரவலான பாராட்டுகளைப் பெற்ற "தம்பி வெட்டோத்தி சுந்தரம்' படத்தை இயக்கிய வடிவுடையான் தற்போது கரணை வைத்து "சொக்கநாதன்' என்ற படத்தை இயக்கவுள்ளார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படத்தில் கரணுடன் இளம் முன்ணனி நடிகர்கள் பத்து பேர் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். படத்தில் பத்து கதாநாயகர்கள் இருந்தாலும் ஒரே ஒரு கதாநாயகிதான். அவர் வித்யா பாலன்.
ஷங்கர் இயக்கிய "நண்பன்' படத்தில் விஜய்யும் சத்யராஜும் இணைந்து நடித்தனர்.
இந்நிலையில் "தாண்டவம்' விஜய் இயக்கும் அடுத்த படத்தில் விஜய் கதாநாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்தில் ஒரு முக்கியமான வேடத்தில் விஜய்யுடன் மீண்டும் இணைந்து நடிக்கிறார் சத்யராஜ்.
தற்போது "சேட்டை', "வாலு', "வேட்டை மன்னன்', "சிங்கம்-2' என நான்கு தமிழ் படங்கள், இரண்டு தெலுங்குப் படங்கள், ஹிந்தியில் ஒரு படம் என பிஸியாக உள்ளார் ஹன்சிகா. இந்தப் படங்களை முடித்தவுடன் சொந்தத் தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கி தமிழிலும் தெலுங்கிலும் படங்களைத் தயாரிக்கவுள்ளார். இது தவிர, சென்னையில் "செட்டில்' ஆகும் எண்ணத்தோடு பெரிய பங்களாவை வாங்கும் முயற்சியில் ரியல் எஸ்டேட் அதிபர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். பங்களாவுக்கு ஹன்சிகா ஒதுக்கியுள்ள பட்ஜெட் ரூ.12 கோடியாம்.
வாய்ப்புக் குறைவதால் திருமணம் செய்துகொள்ளப் போகிறார்; அவர் ஒரு நடிகர் என இலியானாவைப் பற்றி செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. இது குறித்து கேட்டால்... ""நான் உண்மையிலேயே ஒரு நடிகரைக் காதலித்தேன். அவரை முழுவதுமாக நம்பினேன். ஆனால் அவர் எனக்கு துரோகம் செய்துவிட்டார். அதனால் காதலிக்கக் கூடாது; நடிகனைக் காதலிக்கவே கூடாது என அப்போதே முடிவு செய்துவிட்டேன்'' என்கிறார் இலியானா.
"இரண்டாம் உலகம்' படத்தை அடுத்து தெலுங்கு நடிகர் ராணாவை வைத்து புதிய படத்தை இயக்குகிறார் செல்வராகவன். ஒரே சமயத்தில் தமிழிலும் தெலுங்கிலும் உருவாகும் இந்தப் படத்தில் செல்வராகவனுடன் மீண்டும் இணைகிறார் இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா. கதாநாயகியாக நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தை முடித்துவிட்டு சிம்புவை இயக்குகிறார் செல்வா.
பிஜோய் நம்பியார் இயக்கத்தில் விக்ரம், ஜீவா இணைந்து நடிக்கும் "டேவிட்' படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார் ஸ்ருதிஹாசனின் தாயாரும் நடிகையுமான சரிகா. தமிழிலும் ஹிந்தியிலும் தயாராகும் இந்தப் படத்தில் சரிகா இடம்பெறும் "தம் தம் மஸ்த்...' எனத் தொடங்கும் பாடல் முழுக்க முழுக்க கருப்பு வெள்ளையில் படமாக்கப்பட்டுள்ளது.
மந்திராலயத்தில் உள்ள ஸ்ரீராகவேந்திரர் கோயிலுக்கு ரூ.10 கோடி நன்கொடை தரவுள்ளார் ரஜினிகாந்த். ""இந்த நன்கொடை மூலம் கோயில் மண்டபத்தின் பின்புறமுள்ள பழைய கட்டிடங்கள் புதுப்பிக்கப்பட்டு பக்தர்கள் தங்க ஏ.சி. வசதியுடன் கூடிய 25 அறைகளும் 100 சாதாரண அறைகளும் கட்டப்பட உள்ளது. இது தவிர கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகள் பூங்காக்களாக மாற்றப்படவுள்ளன'' என கோயில் நிர்வாக அதிகாரிகளான மாதவசெட்டி, சுயமிந்தரா சாரி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
தர ரீதியாக மிகச் சிறப்பாக உருவாக்கப்பட்டு வசூல் ரீதியாகவும் பெரும் சாதனை படைத்து வருகிறது "பர்ஃபி' ஹிந்திப் படம். இதையடுத்து படத்தை இயக்கிய அனுராக் பாசுவும் நாயகனாக நடித்த ரன்பீர் கபூரும் மீண்டும் ஒன்று சேருகிறார்கள். பிரபல ஹிந்திப் பின்னணிப் பாடகர் கிஷோர் குமாரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகும் இந்தப் படத்தில் பாடகராக நடிக்கிறார் ரன்பீர் கபூர்.
ரஜினியின் நெருங்கிய நண்பரும் தெலுங்கு நடிகருமான மோகன்பாபு "ராவணன்' என்ற படத்தைத் தயாரித்து நடிக்கிறார். பேரன், பேத்தி எடுத்து தாத்தாவாகிவிட்ட மோகன்பாபு, இந்தப் படத்தில் இளம் நடிகர்களுக்குச் சமமாக "சிக்ஸ் பேக்' உடலமைப்பில் நடிக்கிறார் என்பதுதான் சுவாரஸ்யம். இதற்காக ஹாலிவுட்டில் இருந்து ஃபிட்னஸ் பயிற்சியாளர் ஒருவரை இரண்டு மாத கான்ட்ராக்டில் அழைத்து வந்திருக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.