எனக்கு வயது 32. உடம்பில் எப்போதும் மந்த நிலை, மூட்டு வலி, மலச்சிக்கல், நரம்புத் தளர்ச்சி, உடல் சூடு, தலைமுடி, தாடி முடி முழுவதும் வெண்மை, படபடப்பு, கிழத்தோற்றம், காதுகளில் இரைச்சல், இரவில் தூக்கமின்மை, எதிலும் முழு மனதோடு ஈடுபட முடியாத நிலைமை போன்ற உபாதைகளால் துன்புறுகிறேன். இவற்றிலிருந்து விடுபட ஆயுர்வேத மருந்துகள் உள்ளதா?
ஆர்.இளங்கோவன், எடப்பாடி.
பித்தம் மற்றும் வாயு தோஷங்களின் ஆதிக்கம் உங்கள் உடலில் தென்படுவதாகத் தோன்றுகிறது. மனதில் எழும் கோப தாபங்களால் சீற்றமுறும் பித்தம் உடல் சூட்டை அதிகப்படுத்தும். தலைமுடி, தாடி முடிகள் இளம் வயதிலேயே நரைத்துக் கிழத் தோற்றத்துக்குக் காரணமாகிவிடும். அதிகமான அளவில் உடல் அசைவுகளுடன் செய்யப்படும் வேலை, உணவில் வாயுவை அதிகரிக்கச் செய்யும் வகையறாக்களாகிய சுண்டல், வேர்க்கடலை, கடலைப் பருப்பு, கொண்டக் கடலை போன்றவற்றை சூடு ஆறிப் போன நிலையில் சாப்பிடுதல், குளிர்ந்த நீரைக் குடித்தல், குளித்தல் போன்றவற்றால் நாடி நரம்புகள் கலகலத்து நரம்புத்தளர்ச்சி, மூட்டுவலி, மலச்சிக்கல், படபடப்பு ஆகிய உபாதைகளை ஏற்படுத்திவிடும். இதனால் ஒருவித மந்தநிலையும், எதிலும் மனம் ஈடுபட முடியாத நிலையும், இரவில் தூக்கமின்மையும் ஏற்படும். நரம்புகளில் இந்த வாயுவின் தாக்கம் அதிகம் உணரப்படுவதால், காதுகளில் இரைச்சலை ஏற்படுத்தும். இந்த இரு தோஷங்களாகிய பித்த - வாயுவின் சீற்றம் மற்றொரு தோஷமாகிய கபத்தினுடைய சாதாரண அளவிலிருந்து கீழிறங்கச் செய்துவிடும் தறுவாயில், உடல் மெலிந்து, சுறுசுறுப்பின்மை, எந்தச் செயலிலும் நிதானமற்றதன்மையை ஏற்படுத்தும். உங்களைப் போன்றுள்ளவர்களின் நாடித் துடிப்பைப் பிடித்துப் பார்த்தால், துரித கதியாகவும், சமமில்லாத கதியாகவும் தென்படும்.
நெருப்பைப் போன்ற பித்தத்தை,வாயுவின் சேர்க்கையால் உடல் தாபம் கூடி, எரித்துவிடும் நிலைக்குக் கொண்டு வந்துவிடுமென்பதால், நீங்கள் விரைவாகப் பித்தத்தை உடலிலிருந்து வெளியேற்ற வேண்டும். பசி நன்றாக எடுக்கக் கூடியவராக இருந்தால், த்ரிவிருத் லேஹ்யம் எனும் ஆயுர்வேத மருந்தை, மதிய வேளையில் உணவுக்குச் சுமார் 2 மணிநேரம் முன்பாக, 15 -20 கிராம் வரை சாப்பிட்டு நீர் பேதியாக வெளியேற்றி, மாலை வேளையில் சிறிது புழுங்கலரிசியால் தயாரிக்கப்பட்ட கஞ்சித் தண்ணீரை, சிட்டிகை இந்துப்பு கலந்து 2 -3 டம்ளர் (சுமார் 900 மி.லி.) வரை பருகுவது நல்லது. வாரத்தில் ஒருமுறை மட்டும் பேதி செய்து கொள்ளலாம். மூன்று நான்கு வாரங்களில்,தேவையற்ற பித்தம் வெளியேறிவிடும். அதன் பிறகு, பித்த, வாயுக்களை அடக்கக் கூடிய இனிப்பை முக்கிய உணவாகக் கொள்ளுதல் அவசியமாகும். சர்க்கரைப் பொங்கல், பாயசம், பால், நெய், வெண்ணெய், அதிரசம், லட்டு போன்றவை சற்று அதிகம் சேர்த்துக் கொண்டால், பித்த வாயுக்களைக் கட்டுப்படுத்தி, கபத்தின் வளர்ச்சியைத் தூண்டிவிட்டு, உடலுக்கு வனப்பைத் தரும்.
சந்தனாதி எனும் ஆயுர்வேத தைலத்தைத் தலைக்குத் தேய்த்து 1/2 - 3/4 மணி நேரம் ஊறிய பிறகு, காலையில் குளித்து வந்தால், உடலிலுள்ள பித்த வாயுக்கள் மட்டுப்படும். விதார்யாதிகிருதம், அப்ரக பஸ்மம், திராக்ஷôதி கஷாயம் போன்ற தரமான மருந்துகளை ஓர் ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனைப்படி நீங்கள் சாப்பிட்டு வந்தால், உடலில் நல்ல மாற்றங்கள் தென்படத் தொடங்கும்.
காரமான சுவை கொண்ட உணவு வகைகள் அனைத்தும் உங்களுக்கு பித்த வாயுவைத் தூண்டிவிடும் என்பதால், உணவில் காரத்தைக் குறைத்துக் கொள்வது நலம். மனதில் எழும் கோப -தாபங்களுக்குத்தக்க போக்கிடம் காட்டி, மனதை அமைதியாக வைத்துக் கொள்வது மிகவும் நல்லது.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.