தினமணி கதிர்

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கை, கால்களில் பயங்கர வலி!

தண்ணீரிலுள்ள குளிர்ச்சி தலை வழியாகக் கழுத்துத் தண்டுவடப் பகுதியில் இறங்கினால், அப்பகுதியிலுள்ள வில்லைகளின் திடமான உயரமும், அதன்

எஸ். சுவாமிநாதன்

நான் ஒரு மலையாளி. வயது 67. தினமும் தலைக்குச் சாதாரண தண்ணீரில்தான் குளிக்கிறேன். கடந்த 4 மாதமாக கை, கால்களில் பயங்கர வலி உள்ளது. சரியாக அசைக்கவோ, மடக்கவோ முடியவில்லை. இரவில் வலி கூடுகிறது. உடம்பு தேய்த்துக் குளிக்க கையைத் தூக்க முடியவில்லை. இந்த உபாதை தீர வழி உள்ளதா?

எம்.ருக்குமணி, தண்டையார்பேட்டை.

தண்ணீரிலுள்ள குளிர்ச்சி தலை வழியாகக் கழுத்துத் தண்டுவடப் பகுதியில் இறங்கினால், அப்பகுதியிலுள்ள வில்லைகளின் திடமான உயரமும், அதன் ஸ்திரத் தன்மையும் கலகலத்துவிடக் கூடும். அவை மெலிந்தாலோ, தன் இடம் விட்டு நெகிழ்ந்தாலோ, நரம்புகளின் மீது அழுத்தத்தை ஏற்படுத்தி, கைகளில் கடும் வலியை ஏற்படுத்தும். குளிர்ச்சியான தண்ணீரை தலையில் விட்டுக் கொண்டால், நரம்புகளிலுள்ள வாயு எனும் தோஷம் சீற்றமடையும். அதனால் தண்டுவடப் பகுதியிலுள்ள  நரம்புகளில் குடிகொண்டுள்ள கண்களுக்குப் புலப்படாத வாயு சீற்றமடைந்து, உங்களுக்கு உடல் வலியை ஏற்படுத்தி இருப்பதாகத் தெரிகிறது.

தண்டு வடத்திலுள்ள குளிர்ச்சியை மாற்றுவதற்கு, சூடான வீர்யம் கொண்டதும், வலி நிவாரணியாகவும் செயல்படக் கூடிய நொச்சி, எருக்கு, ஆமணக்கு, கற்பூரம், கல்யாண முருங்கை, யூகலிப்டஸ், புங்கை போன்றவற்றின் இலைகளை ஒரு துணியில் மூட்டை கட்டி, சட்டியில் போட்டு சூடாக்கி, முதுகுத் தண்டுவடப் பகுதியில் கழுத்து முதல் கீழ் இடுப்பு வரை ஒத்தடம் கொடுப்பது மிகவும் நல்லது. இதைக் காலையில் உணவுக்கு முன் செய்து கொள்வதுதான் சிறந்தது. குளியலை மாலை வேளைக்கு மாற்றிக் கொள்ளலாம்.

மாலை வேளைகளில் கற்பூராதி தைலம், நாராயண தைலம், ஸஹசராதி தைலம் போன்றவற்றில் ஒன்றிரண்டைக் கலந்து நீராவியில் சூடாக்கி, தண்டுவடம் முழுவதும் மேலிருந்து கீழாக, இதமான பதத்தில் தேய்த்து வெந்நீர் ஒத்தடம் கொடுப்பது நல்லது. அதன் பிறகு, வெதுவெதுப்பான தண்ணீரில் குளிக்க வேண்டும். தலைக்குக் குளிர்ந்த தண்ணீர் விட்டுக் கொள்வதைத் தவிர்க்கவும்.

 "க்ரீவாவஸ்தி' என்று ஒரு சிகிச்சைமுறையும், "கடி வஸ்தி' என்ற ஒரு முறை வைத்தியமும் உங்களுக்கு நல்ல பலனைத் தரலாம். உளுந்து மாவை கழுத்தின் தண்டுவடப் பகுதியில் வரம்பு கட்டி, அதனுள்ளே மூலிகைத் தைலத்தை வெதுவெதுப்பாக ஊற்றி, சுமார் 1/2 - 3/4 மணி நேரம் ஊற வைத்து, எண்ணெய்யைப் பஞ்சால் முக்கி ஒரு பாட்டிலில் சேகரித்து, வரம்பை எடுத்துவிடும் சிகிச்சை முறையால் பல அறுவை சிகிச்சைகளைத் தவிர்க்க இயலும். இதற்கு "க்ரீவா வஸ்தி' என்று பெயர். இதே சிகிச்சை முறையை இடுப்புப் பகுதியில் செய்தால் அதற்கு "கடி' வஸ்தி என்று பெயர்.

சூடான வீர்யம் கொண்ட மூலிகைத் தைலங்களில் ஒன்றை 2 -4  சொட்டுகள் மூக்கினுள் விட்டு, உறிஞ்சித் துப்பிவிடுதல் எனும் நஸ்ய சிகிச்சை முறையால், குளிர்ச்சியால் ஏற்பட்டுள்ள கழுத்து எலும்புப் பகுதியின் வலியைக் குறைக்க முடியும். இதற்குப் பிறகு, தவிடு மாவு கொண்டு சூடாக கழுத்தில் ஒத்தடம் கொடுப்பதும் நல்லதே.

குளிர்ந்த தரையில் படுப்பது, குளிரூட்டப்பட்ட அறையில் சில்லிட்டிருக்கும் தலையணையின் மீது கழுத்து எலும்பு படும்படி படுத்தல், குளிர்ந்த நீரைப் பருகுதல், வெயிலில் சென்றுவிட்டு, வீட்டுக்கு வந்ததும், குளிர்ந்த பானங்களைப் பருகுதல் போன்ற செயல்களை நீங்கள் தவிர்க்க வேண்டும்.

குடலில் வாயுவை அதிகரிக்கச் செய்யும் பருப்பு வகைகள், உருளைக் கிழங்கு, வாழைக்காய், சேப்பங்கிழங்கு போன்றவற்றைத் தவிர்க்கவும். கறிகாய்களால் தயாரிக்கப்பட்ட சூப், மிளகு ரசம், தனியா, ஜீரகம், மிளகு, உப்பு சேர்த்துப் பொடிக்கப்பட்ட பொடி சாதம், கறிகாய் கூட்டு வகையறா, மோர் புளித்தது போன்றவை சாப்பிட உகந்தவை.

ஸஹசராதி கஷாயம், மஹாராஸ்னாதி கஷாயம், யோகராஜ குக்குலு, குக்குலு திக்தகம் கஷாயம், ராஸ்னா ஸப்தகம், ஸப்தஸôரம் போன்ற மருந்துகளில் உகந்ததை ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனைப்படி சாப்பிடவும்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

ஏழுமலையான் தரிசனம்: 16 மணிநேரம் காத்திருப்பு!

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

SCROLL FOR NEXT