""எழுதாமல் இருக்க முடியாது!'' - சா.கந்தசாமி
சஷ்கித்திய அகாதெமி சனியன்று (26.9.2015) ஏற்பாடு செய்திருந்த எழுத்தாளர் சந்திப்பில் மேடை ஏறினார் சா. கந்தசாமி. வெளிப்படையாகப் பேசுவதில் தமிழ் எழுத்தாளர் சா. கந்தசாமிக்கு முதலிடம் கொடுத்தாக வேண்டும். அன்றைக்கு அவர் பேச்சு அப்படித்தான் இருந்தது.
சஷ்கித்திய அகாதெமி சனியன்று (26.9.2015) ஏற்பாடு செய்திருந்த எழுத்தாளர் சந்திப்பில் மேடை ஏறினார் சா. கந்தசாமி. வெளிப்படையாகப் பேசுவதில் தமிழ் எழுத்தாளர் சா. கந்தசாமிக்கு முதலிடம் கொடுத்தாக வேண்டும். அன்றைக்கு அவர் பேச்சு அப்படித்தான் இருந்தது.
""ஐம்பது ஆண்டுகளுக்கு முன் எழுத ஆரம்பித்தேன். இன்னும் எழுதிக்கொண்டிருக்கிறேன். எழுத வயதில்லை. இன்று மேடைக்கு வந்து, நின்றுகொண்டு பேசுகிறேன்'' என்றார் சுறுசுறுப்புக்கு உதாரணமான கந்தசாமி.
தம் குடும்பமும் 250 ஆண்டுகளுக்கு முன் புலம் பெயர்ந்து வந்தவர்கள்தாம் என்றார் கந்தசாமி.
""என்னுடைய முதல் நாவல் சாயாவனமும் புலம் பெயர்ந்தவர்கள் குறித்த நாவல்தான். வள்ளலூரிலிருந்து காவிரிக்கரைக்குக் குடிபெயர்ந்தோம். நதிக்கரை ஓரத்தில் தாய் ஊர் - பூம்புகார். சாயாவனம் கிராமம் காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து 3 கி. மீ.தூரம்தான். என் வாழ்க்கை நதிக்கரை ஓரமாகத்தான் வளர்ந்திருக்கிறது. மகனுடைய வீட்டுக்குச் சென்றாலும் அது ஃப்ரேசர் ஆறு ஓடுகிற நகரம்தான்.
நாங்கள் நூறு ஆண்டுகளாகச் சண்டை போடுகிற குடும்பம். அநீதிக்கு எதிராக, உற்றார் உறவினர் என்றுகூடப் பாராமல், எங்களை அறியாமலேயே சண்டை போடுவோம். எங்கள் வீட்டுப் பெண்கள், வெளியே அநியாயமாக எதாவது நடந்தால், கதவைத் திறந்து விட்டு, சேலையில் வைத்திருக்கும் ஆயுதத்தைக் கொடுத்து அனுப்புவார்கள். தர்மத்துக்காகப் போராட வேண்டும். அதுவே லட்சியம். என் எழுத்து அநீதியை எதிர்த்துக் குரல் எழுப்புவது மாதிரி தெரிந்தால் அதுதான் காரணம். இந்தப் பின்னணியிலிருந்து வந்தவைதான் என் எல்லாக் கதைகளும்'' தன் பின்னணி குறித்துப் பேசிய கந்தசாமி, மொழி பற்றி சிந்தனையைத் தூண்டும் வகையில் சில கருத்துக்களை எடுத்து வைத்தார்.
""மொழிக்கும் அறிவுக்கும் ஒரு சம்பந்தமும் கிடையாது. மொழி என்பது வெறும் ஒலிதான். சத்தம்தான். சிந்தனையை மொழியில் மொழிபெயர்த்துத்தான் எல்லாரும் சொல்கிறார்கள். கௌதம புத்தர் பேசியவை, உபதேசம் செய்தவை எல்லாம் அன்றைக்கு வழக்கில் இருந்த மஹதி மொழியில்தான். பிறகு அந்த மொழி வழக்கொழிந்து போகவே, அவை பாலி மொழியில் மொழி மாற்றம் பெற்றன.
எழுத்தாளன் ஒரு குரு. அதனால் எழுதுவதன் நோக்கம் உன்னதமாக இருக்க வேண்டும். எளிமையாக இருந்து மகோன்னதமான வாழ்க்கை வாழ்ந்தவர்களைப் பற்றி எழுத வேண்டும்.
தமிழ் மொழியில் இரண்டு லட்சம் சொற்கள் இருக்கின்றன என்கிறார்கள். ஆனால் தமிழ் எழுத்தாளனுக்கு 1000 முதல் 1500 சொற்கள் தெரிந்திருந்தால் போதும். ஏ.கே. ராமானுஜன் சங்க இலக்கியத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். அது உலகம் முழுதும் கொண்டு செல்லப்பட்டது. அறிவு வேறு, ஞானம் வேறு. படைப்புக்கு அறிவு சத்ரு. இப்போது இலக்கியத்தையே முற்போக்கு இலக்கியம், பிற்போக்கு இலக்கியம், தலித் இலக்கியம், பெண்ணிய இலக்கியம் என்று எழுதுபவர்கள் தங்களைக் குறித்துக்கொள்கிறார்கள்.
பாரதி நிம்மதியாக வாழ்ந்ததே இல்லை. எழுதுவது தவிர, அவர் எந்த வேலையும் செய்யவில்லை. கஷ்டப்பட்டார். ஆனால் அவரே 'எத்தனை கோடி இன்பம் வைத்தாய்?' என்று பாடினார். அவருடைய இதயம் உருகி ஆறாக ஓடிற்று. சொல்லின் மூலமாகச் சொல்லைக் கடப்பதுதான் உண்மையான எழுத்து. சொல்லப்படுவதன் மூலம், சொல்லப்படாததையும் வாசகனுக்குக் கொண்டு செல்வதுதான் எழுத்து.
நான் எழுத ஆரம்பிக்கும்போது, கடைசி வரியை மட்டும்தான் எழுதி வைத்திருப்பேன். நான் 200-250 பக்கங்களில் என் நாவலை எழுதுவேன். ஆனால் வேறு குறிப்பு எதுவும் என்னிடம் கிடையாது. 1965இல் சாயாவனம் நாவலை எழுதினேன். அதையும் அப்படித்தான் எழுதினேன்.
ராமலிங்க சுவாமிகள் பாடல்களைப் படித்தால் கண்களில் கண்ணீர் வரும். வெறும் சொல்தான். ஆனால் அந்தச் சொல்லில் உள்ள உணர்வுகள் நம்மைச் சிந்திக்க வைக்கின்றன. எழுதாமல் இருப்பது ஒரு சுகம். என்றாலும், எழுதாமல் இருக்க முடியாது. நான் திராவிடமும், கம்யூனிசச் சித்தாந்தமும் கொண்ட பாரம்பரியத்தைச் சேர்ந்தவன். எனக்குக் கிடைத்த பதிப்பாளர்கள் அற்புதமானவர்கள். சாயாவனத்தை வெளியிட்ட லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி அழகாகப் பதிப்பித்தார். மற்ற பதிப்பாளர்களும் அப்படியே.
என் கதையைப் போடுங்கள் என்று எந்தப் பத்திரிகை ஆசிரியரையும் நான் கேட்பதில்லை. அவர்கள் கேட்கிற போது நான் எழுதிக் கொடுத்திருக்கிறேன்'' என்றார்.