முகப்பு
தினமணி கதிர்

15 வயது முதலீட்டு ஆலோசகர்!

ஏற்ற இறக்கத்தில் பங்கு சந்தை,   நாட்டின் ஏற்றுமதி உயர்வு, நிதிநிலை அறிக்கை, முதலீட்டாளர்கள் ஆலோசனைக் கூட்டம், பணப்பரிவர்த்தனை, மியூச்சுவல் பண்டு, சென்செக்ஸ் புள்ளிகள் உயர்வு, நிகர கடனில்லா நிறுவனம்

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:53 PM
பகிர்:


ஏற்ற இறக்கத்தில் பங்கு சந்தை,   நாட்டின் ஏற்றுமதி உயர்வு, நிதிநிலை அறிக்கை, முதலீட்டாளர்கள் ஆலோசனைக் கூட்டம், பணப்பரிவர்த்தனை, மியூச்சுவல் பண்டு, சென்செக்ஸ் புள்ளிகள் உயர்வு, நிகர கடனில்லா நிறுவனம் ,பொருளாதார வளர்ச்சியில் அந்நிய முதலீடு போன்ற  சொற்களுக்கான  பொருள்கள்,

சாதாரண மக்களுக்குத் தெரியாது. ஆனால் ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்து புள்ளி விவரங்களை கூறுபவர்கள் இந்த சொற்களைப் பயன்படுத்துவார்கள்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்த வீரபத்ரன்-வாணி ஆகியோரின் மகன் நிகில் ஆதித்யன். வயது15 . ஒன்பதாம் வகுப்பு மாணவன்.    ஆன்லைன் மூலம் பல சான்றிதழ் படிப்புகளைப் படித்திருக்கிறார்.  மிகக் குறைந்த வயதில் முதலீட்டு ஆலோசகராக வளர்ந்து வருகிறார். 

இது குறித்து அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டதாவது:

""நான்   அமெரிக்காவைச் சேர்ந்த உலகத்திலேயே மிகச் சிறந்த முதலீட்டாளராக கருதப்படும் வாரன் பஃபெட் குறித்த ஒரு டாக்குமென்டரியை சென்ற  ஆண்டு பார்த்தேன். அவர் 15 வயதில் முதலீடுகள் குறித்து படித்து, முதலீட்டாளராக தனது வாழ்க்கையைத்  தொடங்கி,  இப்போது சுமார் 70 வயதுக்குமேல் ஆகியும் சிறந்த முதலீட்டாளராக சர்வதேச அளவில் திகழ்ந்து வருகிறார்.  எனவே அவரை முன்மாதிரியாகக் கொண்டு நானும் ஒரு சிறந்த முதலீட்டாளராக வேண்டும் என நினைத்தேன். 

இதையடுத்து எனக்கு முதலீட்டு வணிகம் மற்றும் தரவு அறிவியலில் ஆர்வம் உண்டானது. இது குறித்து ஆன்லைன் மூலம் படிப்பதற்காக இணையதளத்தில் தேடினேன்.  உலகத்தில் தலைசிறந்த பல்கலைக்கழகமான அமெரிக்காவில் உள்ள யேல் பல்கலைக்கழகத்தின் உள்ள "நிதி சந்தைகள்' என்ற ஆன்லைன்படிப்பில் சேர்ந்தேன். மேலும் தரவு அறிவியல்  (ஈடிஎக்ஸ்ல் டேட்டா சயின்ஸ்) சான்றிதழ் படிப்பை அமெரிக்காவில் உள்ள மற்றொரு தலைசிறந்த பல்கலைக்கழகமான ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம் படித்தேன். கூகுள் அகாதமியின் தரகு பகுப்பாய்வில் தொடக்கநிலை, மேம்படுத்தப்பட்ட நிலை, பயனாளர்கள் நிலை, குறிச்சொல் நிர்வகிக்கும் நிலை, தரவு பதிப்பு நிலை ஆகிய சான்றிதழ் படிப்புகளையும் ஆன் லைன் மூலம் படித்தேன்.  இந்தப் படிப்பினால்,  எந்தெந்த நிறுவனங்களில் எந்தெந்த காலகட்டத்தில் முதலீடு செய்யலாம் என்பதைத் தெரிந்து கொள்ளும் திறன் எனக்கு ஏற்பட்டது.    முதலீட்டுச் சந்தையின் எதிர்காலம்,   பங்கு சந்தை, முதலீட்டுச் சந்தை குறித்து அலசி ஆய்வு செய்யும் திறனும் வந்தது.  நான் ஒரு வலைதளப் பக்கத்தை வெளியிட்டுள்ளேன். அதில் நான் படித்தவற்றை அதாவது  நிதியின் முக்கியத்துவம்,  உகந்த முதலீட்டாளர்களை எப்படி உருவாக்க வேண்டும் என்பது குறித்து விரிவாகப் பதிவிட்டுள்ளேன். மேலும் உலக அளவில் ஆன்லைன் படிப்புகள் எங்கெங்கு உள்ளன? அவற்றில்  எப்படிச் சேர்ந்து படிக்க வேண்டும் என்பன போன்ற தகவல்களை  இணையதளம் மூலம் தெரிவித்துள்ளேன். தற்போது எனக்கு தினசரி ஆன்லைன் படிப்புகள் குறித்தும், நிதிநிலை படிப்புகள் குறித்தும் சுமார் 10 பேர் இ-மெயில் மூலம் விசாரித்து வருகிறார்கள். அவர்களுக்கு இலவசமாக ஆலோசனை வழங்கி வருகிறேன். இதன் மூலம் நான் என்னை புதுப்பித்துக் கொள்கிறேன். முதலீட்டாளர்களும், முதலீட்டு ஆலோகர்களும் நாட்டின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கிறார்கள்.

எனவே எனக்கு இந்தப் படிப்பு மேலும் ஊக்கத்தை அளிக்கிறது. தற்போது என்னால் முதலீடுகள் குறித்த ஆலோசனைகளைக் கூற இயலும். அதற்கான தகுதியை நான் வளர்த்துக் கொண்டேன். தற்போது இது குறித்து படிக்க விரும்பும் மாணவர்களுக்கு இலவசமாக ஆலோசனை வழங்கி வருகிறேன். பெண்கள் அதிகமாக இந்தத் துறைக்கு வந்து வெற்றி பெற வேண்டும். வரும் காலத்தில் நான் முதலீட்டாளர் நிறுவனம் தொடங்கி, இந்தியா மற்றும் அமெரிக்காவில் மூதலீடு செய்ய திட்டமிட்டுள்ளேன். நான் அதிலும்  வெற்றி பெறுவேன் என உறுதியாக நம்புகிறேன்'' என்றார். 

முழு கட்டுரையைப் படிக்க →