கரோனாவில் இருந்து தப்பிக்க!
மிகவும் சாமர்த்தியமான இந்த வைரஸ், நாம் சிறிதும் சந்தேகப்படாத நபர்கள் மூலமாகவும் பரவக்கூடியதாக இருக்கிறது. அது அமர்ந்திருக்கும் பகுதிகளிலிருந்து வேறு ஒருவருக்கு சட்டெனப் பரவும்
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்
நான் வேலை செய்யும் அலுவலகத்தை விரைவில் திறக்க இருக்கிறார்கள். அங்கு கரோனா வைரஸ் உள்ளவர்கள் வந்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நான் என்ன செய்ய வேண்டும்? என்னை நான் எப்படிப் பாதுகாத்துக் கொள்வது?
-சேகர், டில்லி.
மிகவும் சாமர்த்தியமான இந்த வைரஸ், நாம் சிறிதும் சந்தேகப்படாத நபர்கள் மூலமாகவும் பரவக்கூடியதாக இருக்கிறது. அது அமர்ந்திருக்கும் பகுதிகளிலிருந்து வேறு ஒருவருக்கு சட்டெனப் பரவும் தன்மையுடையதாகவும் கருதப்படுகிறது. ஆனாலும் சில விஷயங்களை கருத்தூன்றிச் செய்தால், தவிர்க்க முடியும் என்று அமெரிக்காவிலுள்ள அறுவைச் சிகிச்சை நிபுணர் அதுல் கவாண்டே கூறுவதை நாம் ஏற்க முடிகிறது. "நான்கு தூண்கள்' எனும் தலைப்பில் அவர் பதிவிடும் கருத்துக்கள் சிந்தனைக்குரியவை.
1. தள்ளி இருத்தல் (Distancing) - அலுவலகத்தில் ஒருவர் இருமினாலோ, தும்மினாலோ, பேசினாலோ, மூச்சுவிட்டாலோ கூட, இந்த வைரஸ் வெளியே வந்து பரவிவிடும். அதனால்தான் இருவருக்கிடையே குறைந்தது ஒரு மீட்டர் இடைவெளி இருக்க வேண்டியது அவசியமாகிறது. மீட்டிங் நடத்துவதை வீடியோ மூலம் செய்யலாம். சில நேரங்களில் முகம் பார்த்து நேரில் அமர்ந்து பேச வேண்டிய நிர்பந்தம் வரலாம். அப்போது அருகில் அமராமல் சுமார் ஆறு அடி தள்ளி அமர்ந்து கொண்டு, முகக் கவசம் அணிந்து பேசுவதே நல்லது.
2. சுத்தம், சுகாதாரம் (Hygiene) - குறைந்தபட்சம் இருபது நொடிகளாவது கைகளில் உள்ள விரல்கள், உள்ளங்கை, மணிக்கட்டு, நகங்களை நன்கு கழுவ வேண்டும். ஒரு நாளில் குறைந்தது ஐந்து முறையாவது கைகளைக் கழுவினால், மூச்சுக் குழாய் சார்ந்த உபாதைகளை நாற்பத்து ஐந்து சதவிகிதம் வரை குறைக்கலாம். 2002 - இல் சார்ஸ் நோய் தாக்கிய போது, ஒரு நாளில் பத்து முறையாவது கைகளைக் கழுவுவதைச் செய்தவர்கள் பலரும் அந்த நோயின் தாக்குதலிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொண்டனர்.
மீட்டிங் தொடங்கும் போதும், முடியும் போதும் கைகளைக் கழுவிக் கொள்வது நல்லது. இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை கை கழுவுவதும் நல்லதே. அலுவலர்கள் தொடும் பகுதிகளான கதவு கைப்பிடி, லிப்ட் பட்டன் போன்றவற்றைத் தினந்தோறும் கிருமிநாசினி திரவங்களைப் பயன்படுத்தி சுத்தம் செய்ய வேண்டியது அவசியமாகும்.
பத்திரமாக இருத்தல் மற்றும் சுதந்திரமாக இருத்தல் என மனிதர்களுக்கு இருவகை ஆசைகள் உள்ளன. ஆனால் இன்று பிறரையும் பத்திரமாக வைத்திருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. COVID-19 உபாதையினால் உருவாகும் ஜலதோஷம், தொண்டை அழற்சி ஆகியவற்றை உணர்ந்தவுடன், வீட்டில் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டியதும் அவசியமாகிறது.
3. உள்நுழையும் முன் பரிசோதனை (Screening)-அலுவலகத்தின் நுழைவு வாயிலில் THERMAL
SCANNERS எனும் உடற்சூடு அறிவிக்கும் கருவி மூலம் பரிசோதனை செய்தல்.
நுழைவு வாயிலில் கைகளைச் சுத்தப்படுத்தும் கிருமி நாசினி கொண்டு கைகளைச் சுத்தப்படுத்திக் கொள்ளுதல்.
அலுவலர்களைத் தவிர, பிற நபர்கள் அலுவலகத்துக்கு உள்ளே நுழைவதைத் தடுத்தல் முக கவசம் அணிந்த பிறகே, உள்ளே செல்ல அனுமதித்தல்.
4. முகக்கவசத்தின் முக்கியத்துவம் - அறிகுறி வெளியே தெரியாதவர்கள் கூட முகக் கவசம் அணிவது நல்லது. அறுவைச் சிகிச்சையின்போது பயன்படுத்தப்படும் முகக் கவசம் அணிவதால், தொண்ணூற்று ஒன்பது சதவிகிதம் வைரஸ் பரவலைத் தடுக்கலாம். வீட்டிலேயே தயாரித்து அணியும் முக கவசம் 60% வரை தடுக்கும். ஆனால் முக கவசத்தை இறுக்கி அணியாமல், சற்று தொள தொளவென அணிந்தால், வெளிப்புறக் காற்று வடிகட்டப்படாமல் மூக்கினுள் நுழையும் அபாயமுள்ளது.
மேற்குறிப்பிட்ட நடவடிக்கைகள் எடுத்தும் ஒருவருக்குத் தொற்று இருப்பதாகத் தெரிந்தால், அவரைத் தனிமைப்படுத்தி, அவர் சென்ற இடம், அமர்ந்து பேசிய இடம் போன்றவற்றைக் கிருமி நாசினியின் உதவியால் சுத்தப்படுத்தி, அரசு அறிவித்துள்ள உதவி எண்ணைத் தொடர்பு கொண்டு தெரியப்படுத்த வேண்டும். பலருக்கும் தொற்று இருந்தால், அலுவலகத்தை விட்டு வீட்டிற்கு அனுப்பிவிட்டு, அலுவலகத்தைக் கிருமி நாசினியால் சுத்தம் செய்து குறைந்தது 48 மணி நேரமாவது மூடிய பிறகு, நன்கு சுத்தமாகியுள்ளதா என்பதை அறிந்த பிறகே மறுபடியும் திறக்கலாம். பலருடைய தொற்றையும் உடனே அரசுக்குத் தெரிவித்து அந் நபர்களையும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும்.
அஸ்வகந்தா எனும் சூரண மருந்தை சுமார் ஐந்து கிராம் எடுத்து நூற்று ஐம்பது மி.லிட்டர் சூடான சர்க்கரை கலந்த பாலுடன் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடும் வழக்கத்தை நீங்கள் கடைப்பிடித்தால், இந்த வைரஸ் தாக்கத்தை அலுவலகத்தில் பிறரிடமிருந்து ஏற்படாதவாறு பெறுமளவு பெறலாம்.
(தொடரும்)
பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்,
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,
நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)
செல் : 94444 41771