முகப்பு
தினமணி கதிர்

தயாள மனது  உடையவர்!

சேவியர்- சாக்ஸபோன் இசைக் கருவி வாசிக்கும் ராஜூவின் மகன். ராஜு வாசித்த சாக்ஸபோன் இசையை  ஏ. ஆர். ரஹ்மான் இசை அமைத்த "டூயட்'  படத்தில் உள்ள "காதலே காதலே' என்ற பாட்டில் கேட்கலாம்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:02 PM
பகிர்:

சேவியர்- சாக்ஸபோன் இசைக் கருவி வாசிக்கும் ராஜூவின் மகன். ராஜு வாசித்த சாக்ஸபோன் இசையை ஏ. ஆர்.ரஹ்மான் இசை அமைத்த "டூயட்' படத்தில் உள்ள "காதலே காதலே' என்ற பாட்டில்கேட்கலாம். தனக்கு சாக்ஸபோன் இசைக் கருவி கிடைத்ததைப் பற்றிசேவியர் விவரிக்கிறார்:

""எனக்கு ஏதாவது ஓர் இசைக் கருவியை இசைக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. இசைக் கருவியை வாங்க பணம் இல்லை. சாக்ஸபோன் கருவியை வாசிக்க கற்றுக் கொண்டேன். ஆனால் ஏழ்மை நிலையால் அடுத்த நிலைக்கு உயரும் நிலையில் நான் இல்லை. உயர்ந்த சாக்ஸபோன் கருவியை வாங்கினால்தான், நான் அடுத்த நிலைக்குப் போக முடியும் என்ற நிலை. என்ன செய்வது என்று தெரியாமல், யார் யாரிடமோ உதவி கேட்டேன். அதில் ஒருவர் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம். அவர் எனக்கு உதவி செய்கிறேன் என்று சொன்னார். அதற்குள் ஆண்டவன் அவரை அழைத்துக் கொண்டான்.

ஒரு நாள் இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானை சந்தித்தால், அவரிடம் உதவி கேட்கலாமே என்று தோன்றியது. கஷ்டப்பட்டு அவரது இமெயில் ஐடியைக் கண்டுபிடித்தேன். என்னைப் பற்றி அவருக்கு விரிவாக எழுதி, ஓர் இமெயில் தட்டி விட்டேன். ரஹ்மான் சார் பார்ப்பாரா இல்லையா என்று கூட எனக்குத் தெரியாது. ஆனால் ஆஸ்கார் நாயகன், அன்று இரவே என் கடிதத்தைப் பார்த்திருக்கிறார். படித்திருக்கிறார். உடனே அவர் உதவியாளர் என்னை அழைத்தார். அவர் சொன்ன விஷயம் இதுதான்.

Advertisement

"உங்களை ரஹ்மான் சார் பார்க்க விருப்புகிறார். நீங்கள் கேட்ட மாதிரி ஒரு சாக்ஸபோன் இசைக் கருவி வாங்கி வைத்திருக்கிறார்'' என்று சொல்லி விட்டு, அந்த இசைக் கருவியைப் படமடுத்து எனக்கு வாட்ஸ்அப்பின் மூலம் தகவல் அனுப்பி இருந்தார். நான் அந்த கருவியைப் பார்த்தேன். இசைக் கருவி பற்றி தெரியாதவர்களுக்கு இதைச் சொல்கிறேன். 20 வகை சாக்ஸபோன் கருவிகள் இருக்கின்றன. உயர்ந்த யமஹா கருவி சாக்ஸபோன் ஒரு லட்சம் ரூபாய் வரை விலையில் இருக்கும். அதை வாசித்தால் தான், நான் மேன்மேலும் உயரலாம். வாசிப்பிலும் கான மழை பொழியும். மேஸ்ட்ரோ ரஹ்மான் உதவியாளர் அவர்களிடம் இதைத் தெரிவித்து, ரஹ்மான் சாரிடம் இதைப் பக்குவமான முறையில் எடுத்துக் கூற, நான் வேண்டுகோள் விடுத்தேன்.

அவர், "சொல்றேன்' என்றார். நான் அதைப் பற்றி அவர் கூப்பிடும் வரை காத்திருக்க முடிவு செய்திருந்தேன். குறைந்த பட்சம் ஓர் ஆறுமாதம் ஆகும் என்று நான் முடிவு செய்திருந்தேன். ஆறு நாளைக்குள் எனக்கு மீண்டும் அழைப்பு வந்தது. "ரஹ்மான் சார் உங்களை இன்று இரவு 8 மணிக்கு சந்திக்க விரும்புகிறார்' என்று சொன்னார். நான் என்னவோ ஏதோ என்று நினைத்தவாறு 7-30 மணிக்கே அவர் இசைக் கூடத்திற்குச் சென்று காத்திருந்தேன். நான் இங்கு இருக்க, அவர் எனக்காக அவர் வீட்டில் காத்திருந்தார் போலும்.

மறுபடியும் தொலை பேசியில் அழைப்பு, நான் விரைந்து அவர் வீட்டிற்குச் சென்றேன். நான் உள்ளே நுழையவும், அங்கு உள்ள உதவியாளரைக் கூப்பிட்டு அந்த மூலையில் உள்ள ஒரு பெட்டியைப் பிரிக்கச் சொன்னார். என் கண்களை என்னாலேயே நம்ப முடியவில்லை. நான் கேட்டிருந்த விலை உயர்ந்த சாக்ஸபோன் தங்க நிறத்தில் மின்னியது. 6 மாதம் ஆகும் என்று நினைத்திருந்த அந்த இசைக் கருவியை 6 நாளில் தருவித்துக் கொடுத்த இசைப் புயலுக்கு நான் எப்படி நன்றி என்று ஒரு வார்த்தையில் சொல்ல முடியும்?

அவர் எனக்கு இலவசமாகக் கொடுத்த சாக்ஸபோன் இசைக் கருவியை, நான் நன்றாகப் பயிற்சி செய்து, அவர் ஒலிப்பதிவுக் கூடத்தில், அவரது இசையில் வாசித்தால் தான், நான் அவருக்கு சரியான முறையில் நன்றி செலுத்தியது போல் ஆகும் என்று நான் நினைக்கிறேன். ஆண்டவன் அதற்கு உதவி செய்வார் என்று அவரைப் பிரார்த்திக்கிறேன்'' என்றார் சேவியர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments