சப்தமில்லாமல் சதமடித்து சர்ஃப்ரைஸ் கொடுக்கும் வெய்யில்! வேலூரில் 107.96 டிகிரி
தமிழகம் முழுவதும் கோடை வெப்பமானது சதமடித்து வருகிறது, வேலூரில் 107.96 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது.
பிப்ரவரி மாதம் இரண்டாம் வாரத்துக்குப் பிறகு, தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் வெய்யில் வாட்டத் தொடங்கி தற்போது சப்தமே இல்லாமல் பல மாவட்டங்களில் சதமடித்து வருகிறது.
தமிழகத்தில் இந்த ஆண்டில் முதல் முறையாக வேலூர் மாவட்டத்தில் 107.96 டிகிரி வெய்யில் கொளுத்தியிருக்கிறது. நேற்று நாடு முழுவதையும் ஒப்பிட்டால், வேலூர் மாவட்டம் மிக வெப்பமான பகுதியாக இருந்துள்ளது. அது மட்டுமல்ல, கடந்த ஐந்து ஆண்டுகளை ஒப்பிட்டால், ஏப்ரல் மாதத்தில் மிக மோசமான வெப்பம் பதிவான நாளாகவும் மாறியிருக்கிறது.
இன்று காலை 8.30 மணியுடன் நிறைவு பெற்ற வெப்பநிலை விவரங்களை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கிறது. அதில், கரூர் பரமத்தி 105.08 டிகிரி ஃபாரன்ஹீட், தருமபுரி 102.2 டிகிரி, ஈரோடு 105.08, நாமக்கல் 104, திருப்பத்தூரில் 103.1, திருச்சி 102.38, திருத்தணி 102.02 டிகிரி ஃபாரன்ஹீட், மதுரை நகரம், பாளையங்கோட்டையில் 101. டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியிருக்கிறது.
Advertisement
வேலூரில் அதிகபட்சமாக 107.96 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியிருக்கிறது.
ஏப்ரல் மாதம் தொடங்கியதிலிருந்து வெப்பம் கொளுத்திவந்த நிலையில், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஆங்காங்கே மழை பெய்து மண்ணைக் குளிர்வித்திருந்தது. சாத்தூர், திருத்தணி, உத்தமபாளையம், கோடி, பெரம்பலூர் பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்திருந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில், திங்கள்கிழமை முற்பகல் 12 மணிக்குள் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்திருந்தது. அரை மணி நேரம் அடித்துப் பெய்த மழையால் வெய்யில் ஓரளவுக்குத் தணிந்திருந்தது. ஆனால், மழை பெய்து ஓரளவுக்கு குளிச்சியான சூழல் இருந்த மறுநாளே வெப்பம் பழையபடி வெளுத்து வாங்கியிருக்கிறது.
மழை பெய்திருக்கிறதே, இரண்டு மூன்று நாள்களுக்கு வெப்பத்திலிருந்து விடுதலை என்று நினைத்திருந்த மக்களுக்கு கடும் சோகமாக இந்த செய்தி வெளியாகியிருக்கிறது.
Summer heat is sweltering across Tamil Nadu, with Vellore recording a temperature of 107.96 degrees Fahrenheit.